தற்போது நிறுவனங்களில் அதிகரித்து வரும் வேலை கலாசாரம், ஊழியர்களின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க உடல்நல கவலையை ஏற்படுத்துவதாக ஒரு சமீபத்திய ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. மருத்துவம், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் பரவலாக இருக்கும் இரவு நேர ஷிப்டுகளில் தொடர்ந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு, சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம் அதிகம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழ் வெளியிட்ட தகவலின்படி, 14 ஆண்டுகளில் சுமார் 2,20,000 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இரவு நேரம் பணிபுரிபவர்களுக்குப் பகல்நேரம் பணிபுரிபவர்களைவிட சிறுநீரகக் கற்கள் உருவாகும் ஆபத்து 15% அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆபத்துக்கு முக்கியக் காரணம், உடலின் இயற்கையான 24 மணி நேரக் கடிகாரம் சீர்குலைவதுதான். இரவில் விழித்திருப்பதும் பகலில் தூங்குவதும், செரிமானம், ஹார்மோன்கள் மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும் இந்த கடிகாரத்தில் குறுக்கிடுகிறது. இதனால் செரிமானம் பாதிக்கப்படுவது, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் திரவச் சமநிலையில் மாற்றம் ஆகியவை ஏற்பட்டு, சிறுநீரக கல் உருவாவதற்குப் பங்களிக்கின்றன.
மேலும், இரவு நேரப் பணிகளுடன் தொடர்புடைய சில வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் இந்த சிக்கலை அதிகப்படுத்துகின்றன. இரவு ஷிப்டில் பணிபுரியும் ஊழியர்கள் பெரும்பாலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, அடிக்கடி புகைபிடிப்பது, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுவது மற்றும் அதிக உடல் எடை போன்றவை உடலில் உள்ள தாதுக்கள் மற்றும் உப்புகளின் ஏற்றத்தாழ்வை மேலும் அதிகரித்து, சிறுநீரக கல் வளர்ச்சியை துரிதப்படுத்துகின்றன.
சிறுநீரக கற்களுக்கான அறிகுறிகளாக முதுகு அல்லது அடிவயிற்றில் கடுமையான வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், சிறுநீரில் இரத்தம் மற்றும் வாந்தி ஆகியவை அடங்கும். எனவே, இரவு நேரப் பணிகளில் ஈடுபடுபவர்கள் தினமும் 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலின் திரவச் சமநிலையைப் பராமரிக்கலாம்.
உப்பு அதிகமுள்ள மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது அவசியம். வீட்டில் இருண்ட மற்றும் அமைதியான சூழலில் போதுமான அளவு தூங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகளை திட்டமிடுவது இதுபோன்ற சிக்கல்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும். இந்த ஆய்வு, குறிப்பாக இளம் தொழிலாளர்களுக்கு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களை புறக்கணிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஒரு முக்கியமான எச்சரிக்கையாக செயல்படுகிறது.



