எச்சரிக்கை!… பெண்களை தாக்கும் எலும்பு மெலிவு நோய்!… முன்னெச்சரிக்கை குறித்து விளக்கும் மருத்துவர்கள்!

பெண்களை அதிகம் பாதிக்கும் Osteoporosis என்ற எலும்பு மெலிவு நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.


தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவர் சிராஜுதீன் தலைமையில் Bone Mineral Density பரிசோதனை இலவச முகாம் என்ற எலும்பு அடர்த்தி பரிசோதனை நடைபெற்றது. முகாமில் எலும்புகளின் அடர்த்தியை பரிசோதித்து எலும்புகளின் நிலை குறித்து கண்டறியப்படும். இந்த பரிசோதனையின் மூலம் எலும்புகளின் வலிமை, அதன் தாங்கும் திறன், தேய்மானத்தின் அளவு போன்றவற்றை கண்டறியலாம். இதனை தெரிந்து கொள்வதன் மூலம் எலும்புகளை வலுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், சித்த மருந்துகள், உணவு முறைகள், பயிற்சி முறைகள், போன்றவற்றை பின்பற்ற முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். இந்த பரிசோதனை முக்கியமாக ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis) என்ற எலும்பு மெலிவு நோயை கண்டறிய உதவுகிறது.
இந்த முகாமில் எலும்பு வலு இல்லாமல் இருப்பவர்கள், நீண்ட நாட்களாக முதுகெலும்பு வலி,முழங்கால் வலி உள்ள நபர்கள், தன்னிச்சையாக அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படுபவர்கள், மாதவிடாய் நின்ற பெண்கள், குழந்தைப்பேறு நீண்ட நாட்களாக இல்லாத பெண்கள், வயதான ஆண்கள் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று சென்றனர்.

40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், மெனோபாஸ் என்ற மாதாந்திர சூதகம் நின்றவர்கள், கருப்பை அகற்றல் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், குடும்பத்தில் எலும்புகள் தன்னிச்சையாக உடையும் தன்மையுடையவர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மூட்டுவலியினால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு எலும்பு அடர்த்தி பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் என்று சித்த மருத்துவர் சிராஜுதீன் கூறினார்.

மேலும், காரணமில்லாமல் அல்லது சிறிய உடற் செயல்பாடுகளால் கூட எலும்புகள் உடைவது இந்தநோயின் முக்கிய அறிகுறிகள் ஆகும். முக்கியமாக இந்நோயில் பாதிக்கப்படும் எலும்புகள் முதுகு தண்டுவடம் , மார்பு எலும்புகள், இடுப்பு எலும்பு, கை மணிக்கட்டு போன்றவை ஆகும். இந்நோயானது ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கின்றது. ஏனெனில் பெண்கள் 50 வயதை கடக்கும் போது மாதாந்திர பூப்பு சுழற்சி நின்று விடுவதால் எஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரப்பு குறைய ஆரம்பிப்பதால் அது எலும்பில் கால்சியம் சத்து சேர்வதைக் குறைத்து விடுகிறது. இதனால் எலும்புகள் பலவீனமடைகின்றன.

புகை பிடித்தல், மது அருந்துதல், புகையிலை பொருட்களை உட்கொள்ளல், மென் பானங்கள் அருந்துதல் போன்ற காரணங்களால் ஆண்களுக்கு எலும்பு அடர்த்தி குறைகின்றது. உடற்பயிற்சி செய்யாததும் இதற்கு முக்கிய காரணமாகும். மேலும், இந்நோயை தடுக்க உளுந்து , வெந்தயம், பால், பால் பொருட்கள் , கீரைகள் முக்கியமாக பிரண்டை என்னும் மூலிகை எடுத்துக் கொள்ள வேண்டும். பிரண்டையில் உள்ள இயற்கை ஸ்டீராய்டுகள் எலும்பில் எஸ்ட்ரோஜன் ஹார்மோன்களை சேரச் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser3

Next Post

5000 ஆண்டுகளுக்கு முன்பே ஃபிரிட்ஜ் பயன்படுத்திய மக்கள்!... மிச்ச மீதி உணவுகளும் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்! எங்கு தெரியுமா?

Tue Feb 28 , 2023
ஈராக் மக்கள் பயன்படுத்திய 5000 ஆண்டுகள் பழமையான ஃபிரிட்ஜ் மற்றும் அதில் வைக்கப்பட்டிருந்த மிச்ச மீதி உணவுப் பொருட்கள் உள்ளிட்டவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும், இத்தாலியைச் சேர்ந்த பிசா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் ஒன்றிணைந்து ஈரானில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டனர் அப்போது, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு உணவகத்தின் இடிபாடுகளை கண்டுபிடித்தது. இந்த கண்டுபிடிப்பு அன்றைய சாதாரண அன்றாட […]
irag

You May Like