அதிவேகமாக கடல் மட்டம் உயர்ந்து வருவதால், இந்திய நகரங்களான சென்னை மற்றும் கொல்கத்தா ஆகியவை இந்த நூற்றாண்டில் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என்று சர்வதேச ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.
பெருங்கடல் நீரின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதன் மூலம், நீர் விரிவடைந்து கடல் நீர் மட்டம் உயர்வுக்கு காரணமாகிறது. இதுதவிர, துருவ பகுதிகளில் உருகும் பனிப்பாறைகளால், அதிகளவிலான நீர் பெருங்கடலில் இருந்து வெளியேறுகிறது. இதனால், கடல் நீரின் மட்டம் உயரும் என ஆராய்ச்சியாளர்கள் அவ்வபோது எச்சரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில், அமெரிக்காவில் உள்ள வளிமண்டல ஆராய்ச்சிக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள ஆய்வின்படி, மனிதர்களால் வெளியேற்றப்படும் கரியமில வாயு, மீத்தேன் உள்ளிட்ட பசுமை குடில் வாயுக்களின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால், 2100 ஆம் ஆண்டுக்குள் ஆசியாவின் பெருநகரங்களன தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தா ஆகிய இரண்டு நகரங்களும் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இயற்கை ஏற்ற இறக்கங்கள் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து கொண்டே இருக்கிறது என்றும் இதனால் கடலோரங்களில் உள்ள நகரங்கள் தாக்கத்திற்கு ஆளாகலாம் என்றும் கடல் மட்ட உயர்வை குறைப்பதற்கு விஞ்ஞானிகள் தகுந்த தீர்வு காண வேண்டும் என்றும் அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.காலநிலை மாற்றம் காரணமாக அதிவேகமாக கடல் மட்டம் அதிகரித்து வருகிறது என்றும் சில இடங்களில் கடல் மட்டம் 20 முதல் 30 சதவீதம் வரை இன்னும் சில ஆண்டுகளில் அதிகரிக்கலாம் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மிக மோசமான வெள்ள பாதிப்பு நிகழ்வுகள் ஏற்படுவது அதிகரிக்கும்.
சென்னை கொல்கத்தா மட்டுமின்றி மும்பை, கொச்சி, விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், மங்களூர் ஆகிய இந்திய நகரங்களும் 2050 ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயர்வு அதன் காரணமாக அபாயத்தில் இருப்பதாகவும் இந்த ஆய்வு முடிவு மூலம் தெரிய வந்துள்ளது. மேலும், பாங்காங், மணிலா, யாங்கோன், ஹோ சி மின் சிட்டி பாதிப்புக்குள்ளாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்திற்கான குழுவை ஐநா சமீபத்தில் அமைத்த நிலையில் புவி ஆராய்ச்சி அமைச்சகத்தின் அறிக்கையில் வட இந்திய பெருங்கடல் சுமார் 300 மீட்டர் வரை உயரும் என்று கணித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அமெரிக்கா ஆஸ்திரேலியா நாடுகளின் மேற்கு கடற்கரையோர பகுதிகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள ஆய்வாளர்கள், காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை சார்ந்த மாறுபாடுகளால், இருநிகழ்வுகளின் கூட்டு விளைவுகள் காரணமாக காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பைவிட 50% அதிகமாக இருக்கும் என்றும் இதன்காரணமாக கடற்கரையை ஒட்டிய பெருநகரங்களில் மிகவும் மோசமான வெள்ளப் பாதிப்பு ஏற்படுவதுடன், லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு பாதிப்பு அதிகமாகும் என்றும் கூறினர். உலகம் முழுவதும் கடல் மட்டம் அதிகரித்து வருவதை அடுத்து கடலோர பகுதியில் உள்ள பல நகரங்கள் மூழ்கும் என்று ஆராய்ச்சிகள் கூறிவரும் நிலையில், 2100 ஆம் ஆண்டுக்குள்ள் சென்னை, கொல்கத்தா நகரங்கள் இந்த நூற்றாண்டில் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என்று ஆய்வில் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.