காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞரை விசாரணை எனும் பெயரில் தாக்கியது ஏன்? சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் என்பவர் பெண் பக்தரின் காரில் இருந்த 10 பவுன் நகையை திருடி விட்டதாக வந்த புகாரை அடுத்து, அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சனிக்கிழமை இரவு அஜித் குமார் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்த நிலையில், அஜித்குமாரின் உயிரிழப்புக்கு போலீசார் தாக்கியதே காரணம் என்று அவரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் காவல்நிலைய முற்றுகையிலும் ஈடுபட்டனர். இது தொடர்பாக 6 தனிப்படை காவலர்கள் பணியிட நீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதுதொடர்பாக தாமாக முன் வந்து விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அப்போது பொதுநல மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் அரசு தரப்பு குற்றவியல் வழக்கறிஞரிடம், கடந்த 4 ஆண்டுகளில், 24 லாக் அப் டெத் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விவரம் என்ன என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞரை விசாரணை எனும் பெயரில் தாக்கியது ஏன்? அடித்துக் கொல்லப்பட்டவர் தீவிரவாதியா? அடித்து கொலை செய்துள்ளீர்கள்? ஆயுதம் ஏந்தி தாக்கினால், தற்காப்புகாக காவல்துறையினர் தாக்குவது இருக்கலாம்.. ஆனால் சாதாரண வழக்கில் கைது செய்யப்பட்டவரை, அவரிடம் எந்த ஆயுதமும் இல்லாத நிலையில் தாக்கியது ஏன்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
Read More : அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழனுக்கு முக்கிய பதவி..!! – EPS அறிவிப்பு