சென்னையில் வீட்டில் உள்ள வாஷிங் மெஷின் திடீரென வெடித்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோடம்பாக்கம் சிவன் கோயில் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் கமலா. இவருடன் மகள் சாந்தி, மருமகன் மூர்த்தி மற்றும் அவர்களது மகன்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கமலாவுக்கு உடல்நிலை சரியில்லாததால், மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, வீட்டில் சாந்தி துணிகளை துவைப்பதற்காக வாஷிங் மெஷின் பயன்படுத்தியுள்ளார்.
சில நேரம் கழித்து, வாஷிங் மெஷின் ஓடிக் கொண்டிருந்த நிலையில், திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால், பதறிப்போன சாந்தி தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றுள்ளார். ஆனால், அப்போது தீ மேலும் பற்றி எரிய தொடங்கியது. இதையடுத்து, வீட்டில் இருந்த அனைவரையும் அக்கம்பக்கத்தினர் பத்திரமாக மீட்டனர். மேலும், தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
வீடு முழுவதும் தீ பரவியதால், வீட்டிலிருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து நாசமாகின. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தீயை முழுவதுமாக அணைத்தனர். இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் மின்சாரம் சில மணி நேரம் துண்டிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், 7 ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் வாஷிங் மெஷினில் அதிகளவு துணி போட்டதால், இந்த தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும் மின் கசிவு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததா..? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. நல்வாய்பாக இந்த விபத்தில் யாருக்கு காயம் ஏற்படவில்லை. இந்நிலையில், வீட்டில் உள்ள அனைத்துப் பொருட்களும் தீக்கிரையானதாகவும், திருமணத்திற்காக சேர்த்து வைத்த அனைத்து பொருட்களும் நாசமானதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.