“இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளுங்கள்… 2024 பாராளுமன்ற தேர்தலோடு தமிழக சட்ட சபை தேர்தல் நடந்தால் நாங்கள் பொறுப்பல்ல” என்று அண்ணாமலை பேசியுள்ளார்.
ஆ.ராசாவுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து, சிவானந்தா காலணி பகுதியில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை, “பாஜக கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது காவல்துறை ஏவல் துறையாக நடந்து கொண்டிருக்கிறார்கள். நாட்டின் இறையாண்மைக்கு எதிராக இருப்பவர்கள், தமிழகம் கலவர பூமியாக மாற வேண்டும் என நினைப்பவர்கள் பாஜகவினர் வீடு, உடமைகளை சேதப்படுத்தியுள்ளனர்.

முதலமைச்சர் பாஜகவை மதவாத கட்சி என்கிறார். ஆனால், கலவரம் செய்தவர்கள் குறித்து ஒரு வார்த்தை பேசவில்லை. 2ஜி ஊழல்வாதி பேசியது புதியதல்ல. இதற்கு முன்பும் பேசியுள்ளார். திமுகவுக்கும் இது புதிதல்ல. ஆனால், காலம் மாறிவிட்டது. அரசியல் களம் மாறியுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை இப்போது இல்லை. இப்பிரச்சனையை சமாளிக்க மக்களை மறக்கடிக்க அடுத்த பிரச்சனை துவக்க அறிவாயலத்தில் ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். மத்தளம் போல ஒருபக்கம் பயங்காரவாதிகள். மறுபக்கம் ஆ.ராசா, காவல்துறை கண்டித்து பாஜகவினர் நின்று கொண்டிருக்கிறோம். பாஜக பொறுமை எந்தளவு இருக்கும்?” எனத் தெரிவித்தார்.

முதலமைச்சர் கடவுள் கிடையாது. கோபாலபுரம் குடும்பத்திற்கு நான்கைந்து அமைச்சர்கள் பாத்திரம் கழுவி கிச்சன் கேபினேட்டில் இருக்கிறார்கள். நாங்கள் தான் சுயமரியாதைக்காரர்கள். முதல்வர் தவறுக்கு விமோசனம் கொடுக்குமாறு கோயில் கோயிலாக நாங்கள் செல்லவில்லை. எங்களுக்கு சொந்தமான சுயமரியாதை, சமூக நீதியை திமுக ஒட்டி வெட்டியிருப்பது அபத்தத்தின் உச்சம். முதலமைச்சரின் அறிக்கை கண்ணாடி முன்பாக அமர்ந்து அவருக்காக எழுதியது போல் உள்ளது. அவர் சொன்னது போல நாங்கள் 15 மாதங்களாக நகர்ந்து செல்கிறோம். அப்படியே இருக்க மாட்டோம். ஆட்சிக்கு வர வேண்டும் என கனவு காண்கிறோம். மது அடிமையில் இருந்து மீட்க, அரசு அலுவலகங்களில் வசூல் செய்வதை நிறுத்த, கனிம வளக் கொள்ளையை தடுக்க ஆட்சிக்கு வர கனவு காண்கிறோம்.
அமைச்சர் பொன்முடி பெண்களை ஓசியில் செல்வதாக கூறுகிறார். ஆனால், திமுகவினர் ஓசிக்கு பிறந்தவர்கள். ஓசியில் ஆட்சி நடத்துபவர்கள். ஓசிக்கு மாரடிப்பவர்கள். பணம் கேட்டு மிரட்டிய திமுக எம்எல்ஏ மீது வழக்கு போட்டாலும் கைது இல்லை. 15 மாதங்களாக திமுக ஆட்சியை சகித்துக் கொண்டிருக்கிறோம். இரண்டு வருடம் கழித்து எங்கள் மீது கைவைத்த கோவை காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை வந்தால், நாங்கள் பொறுப்பல்ல. நீங்கள் பணி ஓய்வு பெறும்போது பென்ஷன் பணம் கிடைக்கவில்லை என்றால் நாங்கள் பொறுப்பல்ல. 99 சதவீத காவலர்கள் நேர்மையானவர்கள். ஆளும் அரசுக்கு அடிமையாக இருக்க மாட்டோம் எனக்கூறும் காவல்துறையினரும் இருக்கிறார்கள்.
இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளுங்கள். 2024 பாராளுமன்ற தேர்தலோடு, தமிழக சட்ட சபை தேர்தல் நடந்தால் நாங்கள் பொறுப்பல்ல. நீங்கள் மாற்றிக் கொள்ளவில்லை எனில், மாற்றப்படுவீர்கள். பாஜக தொண்டர்கள் முதலமைச்சர் வீட்டை முற்றுகையிடுவார்கள். முதலமைச்சர் நடுநிலையாக நடந்து கொள்ளும் வரை, கண்ணியமாக பாஜக தொண்டர்கள் இருப்பார்கள். ஐந்தாண்டுகள் ஆட்சியை நல்லபடியாக முடித்து விட்டு செல்லுங்கள். நாங்கள் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பது உங்கள் கையில் தான் உள்ளது”. இவ்வாறு அவர் பேசினார்.