தொழிலதிபர் ஒருவர் தனது மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் கிஷோர் கஞ்ச் பகுதியில் ஜவுளி தொழிலதிபரான சஞ்சய் சேத் என்பவர் தனது மனைவி மீனுவுடன் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று சஞ்சய் சேத் மற்றும் மீனு ஆகிய இருவரும் வீட்டின் 2-வது மாடியில் உள்ள அறையில் இருந்தனர். அப்போது திடீரென்று அவர்களது வீட்டிலிருந்து துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடிச்சென்று பார்த்தபோது மீனு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்க, சஞ்சய் படுகாயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக சஞ்சய் வீட்டில் சோதனை நடத்திய போலீசார், வீட்டில் இருந்த கடிதத்தை கைப்பற்றினர். பாகேஷ்வர் தாமின் தீவிர பக்தரான சஞ்சய் சேத், அக்கடிதத்தில் “குருஜி, என்னை மன்னியுங்கள். எனக்கு இன்னொரு பிறவி கிடைத்தால், உங்களின் தீவிர பக்தனாக பிறக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இறப்பதற்கு முன் சஞ்சய் சேத் தனது செல்போனில் வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அழுதபடியே பேசும் சஞ்சய், தன்னிடம் கடன் வாங்கிவிட்டு திருப்பித் தராதவர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் “எனது பிள்ளைகளுக்காகவும், என் மகளின் திருமணத்திற்காகவும் நான் கொடுத்த பணத்தை திருப்பித் தந்து விடுங்கள். மகளின் திருமணத்தை ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி செலவில் நடத்த ஏற்பாடு செய்யுங்கள்.
என் மகளின் வங்கிக்கணக்கில் ரூ.29 லட்சம் லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது. நானும் என் மனைவியும் வாழ முடியாமல் பிரிந்து செல்கிறோம். மகளுக்கு நிறைய நகைகள் உள்ளன. என் பிள்ளைகளே என்னை மன்னியுங்கள்” என்று அவர் உருக்கமாக பேசியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பு கூறுகையில், ”முதற்கட்ட விசாரணையில் குடும்ப தகராறில் இச்சம்பவம் நடந்துள்ளது போல் தெரிகிறது. இது மிகவும் சோகமான சம்பவம். வெளியாட்கள் யாரும் இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டது போல் தெரியவில்லை. அந்த வீட்டில் தம்பதிகள் தனியாக இருந்தனர். இருப்பினும் நாங்கள் அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம்” என்றார்.