ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிப் படை (IRGC) தலைமையகத்தை அழித்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த தாக்குதல், அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இந்த தாக்குதல் குறித்து, “பாம்பின் தலையே துண்டிக்கப்பட்டது” என்று அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்க ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் “கடந்த 47 ஆண்டுகளில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிப் படை (IRGC) 1,000-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களை கொன்றுள்ளது. நேற்று, அமெரிக்கா நடத்திய பெரிய அளவிலான தாக்குதல் மூலம் அந்த ‘பாம்பின் தலையை’ துண்டித்துள்ளோம்.” என்று தெரிவித்துள்ளது.
IRGC என்பது, 1979-ஆம் ஆண்டு ஈரானின் இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு உருவாக்கப்பட்ட, ஈரான் ஆயுதப் படைகளின் மிக உயர்ந்த மற்றும் சக்திவாய்ந்த பிரிவாகும். இந்தப் படை, ஈரானின் உச்ச தலைவர் Ali Khamenei அவர்களின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வந்தது. காலப்போக்கில், காமெனெயின் ஆட்சிக்காலத்தில் இந்தப் படை மேலும் பலப்படுத்தப்பட்டது.
இந்த தாக்குதலில், புரட்சிப் படையின் தலைவராக இருந்த மொஹம்மத் பக்பூர் என்பவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் அளவிலான இராணுவ நடவடிக்கை நடைபெற்று வருகிறது
“ஆபரேஷன் எபிக் ஃப்யூரி” (Operation Epic Fury) என்ற பெயரில் நடத்தப்படும் இந்த இராணுவ நடவடிக்கையின் கீழ், கடந்த சனிக்கிழமை முதல் இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட ஈரான் இலக்குகள் தாக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானவை:
IRGC இணைத் தலைமையகம்
கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள்
IRGC வான்வெளி (Aerospace) படை தலைமையகம்
ஒருங்கிணைந்த வான்வழி பாதுகாப்பு அமைப்புகள்
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தளங்கள்
கடற்படை கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள்
கப்பல்களை தாக்கும் ஏவுகணை அமைப்புகள்
இராணுவ தொடர்பு கட்டமைப்புகள்
இதுதொடர்பான வீடியோக்களையும் அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது.. அமெரிக்க கடற்படை போர்க்கப்பல்களில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள், ஈரானின் இராணுவ கட்டிடங்கள் மற்றும் விமானத் தளங்களில் இருந்த விமானங்களை அழிப்பது தெளிவாக காணப்படுகிறது.
இந்த இராணுவ மோதல் தற்போது ஈரானைத் தாண்டி மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது. ஈரான், வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க நலன்களை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தியுள்ளது.
இதனிடையே, லெபனானில் இருந்து ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF), லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் நிலைகள் மீது தாக்குதல்கள் நடத்தியுள்ளது.



