படப்பிடிப்பின் போது சண்டைப் பயிற்சியாளர் உயிரிழந்த விவகாரம் குறித்து பா.ரஞ்சித் விளக்கம் அளித்துள்ளார்.
தங்கலான் படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் தற்போது வேட்டுவம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் அட்டக்கத்தி தினேஷ் நாயகனாவும், வில்லனாக ஆர்யாவும் நடித்து வருகின்றனர். கேங்க்ஸ்டர் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் ஃபஹத் ஃபாசில், அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் சண்டைக்காட்சி வேளாங்கண்ணியில் நடைபெற்றது. அப்போது காரை துரத்தும் காட்சியில், வேகமாக காரை ஒட்டி வந்த சண்டைப் பயிற்சியாளர் மோகன் ராஜுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் படப்பிடிப்பின் போது சண்டைப் பயிற்சியாளர் உயிரிழந்த விவகாரம் குறித்து பா.ரஞ்சித் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ஜூலை 13 ஆம் தேதி காலை தமிழ்நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நடைபெற்று வந்த “வேட்டுவம்” படப்பிடிப்பு தளத்தில், திறமையான சண்டைக் கலைஞரும், எங்களுடன் நீண்ட காலம் பணியாற்றியவருமான திரு. மோகன் ராஜ் அவர்களை நாங்கள் எதிர்பாரா விதத்தில் இழந்தோம். அவரின் மனைவி, குழந்தைகள்,குடும்பம் மற்றும் அவரை சக பணியாளராக, நண்பராக அறிந்த அனைவரையும் தேற்றும் வழியறியாது எங்கள் உள்ளம் கலங்குகிறது.
எப்போதும் போலவே கிராஷ் காட்சியை எடுக்கும் முன்பு செய்யும் தெளிவான திட்டமிடல், பாதுகாப்பு ஏற்பாடுகள், எங்களின் வேண்டுதல்கள், வாழ்த்துக்கள் என எல்லாம் இருந்தன. சண்டைக்காட்சிகளை திட்டமிடுவதில், செயல்படுத்துவதில் தெளிவும், நேர்த்தியும் கொண்டிருந்த நிகரற்ற கலைஞரான அவருடைய வழிகாட்டுதலையும், எங்கள் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் மாஸ்டரின் விளக்கமான திட்டமிடலையும், பாதுகாப்பு தயாரிப்புகளையும் அனைவரும் பெரிதும் மதித்தோம், தவறாமல் பின்பற்றினோம்.
ஆனால், அந்த நாள் அண்ணன் மோகன் ராஜ் உயிரழப்பில் முடிந்தது என்பது தாங்கொணா அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மோகன் ராஜ் அண்ணன் அவர்கள், தன் ஸ்டண்ட் டீம், எங்களது குழு, என அனைவரின் மரியாதையையும், அன்பையும் பெற்றவர். செழுமையான அனுபவமும், சாதனைகளும் கொண்டு தன் நேர்த்தியான வேலையால் தன் குடும்பத்தை, சக ஸ்டண்ட் வீரர்களை, இயக்குனர்களை பெருமைப்படுத்திய கலைஞர் அவர்.
எங்கள் ஒவ்வொருவரின் மரியாதையும், அன்பும், வந்தனங்களும் என்றென்றென்றும் அவருக்கு சமர்ப்பணம். இது எங்கள் அனைவரையும் உலுக்கியிருக்கும் பேரிழப்பு. ஒரு கணவராக, தந்தையாக, பிரமாதமான சண்டைக் கலைஞராக, நேர்த்தியான மனிதராக வாழ்ந்த மோகன் ராஜ் அண்ணாவின் இறப்பிற்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள். ஆகச்சிறந்த ஸ்டண்ட் கலைஞராய் அறியப்பட விரும்பிய அவரை என்றும் அப்படியே நாங்கள் நினைவில் போற்றுவோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.