தவாக எம் எல் ஏ வேல்முருகனின் சர்ச்சை பேச்சுக்கு நிகழ்ச்சி மேடையில் மாணவி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 3 ஆண்டுகளாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்து வருகிறார். அந்த வகையில், இந்தாண்டும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது.
தவெக தலைவர் விஜய்யின் விருது வழங்கும் விழா குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மிகவும் கொச்சையாக பேசியிருந்தார். பரிசு பெற வந்த மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர் குறித்து வேல்முருகன் ஆபாசமாக பேசியது தவெகவினர் மட்டுமின்றி, எதிர்க்கட்சியினர் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் ஆதித்ய சோழன், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு இணையதளம் மூலம் புகாரளித்தார். இந்த புகாரை ஏற்றுக் கொண்ட தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், சபாநாயகருக்கும் பதிவு தபால் மூலமாக வேல்முருகன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தவெக சார்பில் இன்று 3வது கட்ட கல்வி விருது வழங்கும் விழா மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்று வருகிறது. விழாவில் பரிசு வாங்கிய திருச்செங்கோட்டை சேர்ந்த மாணவி ஒருவர் நிகழ்ச்சி மேடையில் பேசுகையில், நாங்கள் விஜயை அப்பாவாக பார்க்கிறோம்.. அண்ணனாக பார்க்கிறோம்.. அதை இப்படி தவறாக பேசாதீங்க.. விஜய் அண்ணா உடன் நாங்கள் இருக்கிறோம்” என்றார். மாணவியின் பேச்சை கேட்டப்பின் விஜய் அவரை அணைத்துக் கொண்டார். தவாக எம் எல் ஏ வேல்முருகனின் சர்ச்சை பேச்சுக்கு நிகழ்ச்சி மேடையில் மாணவி பதிலடி கொடுத்த காட்சிகள் இணையத்தில் வைரலாகிறது.