தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, ராமதாஸ் – சசிகலா அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன..
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஆளுங்கட்சியான தி.மு.க மெகா கூட்டணியை அமைத்துள்ளது.. 26 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.. அதாவது, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தே.மு.தி.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன..
இந்த முறை கூட்டணில் பல புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் ஏற்கனவே இருக்கும் கட்சிகளுக்கு திமுக தலைமை தொகுதிகளை குறைத்து கொடுத்து வருகிறது.. கூட்டணி கட்சிகளும் அதற்கு சம்மதம் தெரிவித்து தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகின்றனர்.. எனினும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிக தொகுதிகள் வேண்டும் என்று பிடிவாதம் காட்டி வருகிறது.. இதனால் இழுபறி நீடித்து வருகிறது.. அதே போல் இந்த தேர்தல் எப்படியாவது இரட்டை இலக்கங்களில் தொகுதிகளை பெற்றுவிட என்பதில் விசிக உறுதியாக இருந்தது.. ஆனால் திமுக தலைமை 6 தொகுதிகளை வழங்க முன் வருவதாக கூறப்படுகிறது..
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேஸ்புக் நேரலையில் தொண்டர்களிடம் உரையாடினார்.. அப்போது பேசிய அவர் “ கூட்டணி தலைமையிடம் இருந்து போராடி தான் தொகுதிகளை பெறுகிறோம்.. போராடி தான் நிதியையும் பெறுகிறோம்.
நமது வேட்பாளர்கள் தேர்தல் செலவு மேற்கொள்ளும் தகுதி படைத்தவர்களாகவும் இல்லை.. நட்பு சக்திகளிடம் இருந்து தேர்தல் நிதியை பெற்று நாம் தேர்தலை சந்தித்து வருகிறோம்.
கடந்த தேர்தலில் 6 தொகுதிகளை பெற்று, அதில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றோம்.. தமிழ்நாட்டில் விசிக வளர வேண்டும் என நினைப்பவர்கள் பெரிதாக யாரும் இல்லை என்பது தான் உண்மை. விசிகவுக்கு ஆதரவான சக்திகளை விட எதிரான சக்திகளே அதிகமாக உள்ளது..
அரசியலுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனாலும், இன்னும் களம் புதிதாகவே உள்ளது, இந்த தேர்தலும் நமக்கு புதிது தான். திமுக கூட்டணியில் 10-க்கும் குறைவான தொகுதியே கிடைக்கும் என்பதால் வேட்பாளர் தேர்வில் நெருக்கடி ஏற்படும் சூழல் உள்ளது.. குறைவான தொகுதிகள் கிடைப்பது தற்காலிக பின்னடைவாக இருந்தாலும் எதிர்காலத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.. விசிக மட்டும் தமிழ்நாட்டில் வளர நினைக்கவில்லை, ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் சேர்ந்து வளர்கிறது. அப்படி பயணிப்பதே சிறந்தது.. ” என்று தெரிவித்தார்..
Read More : ஆதார் செயலியை கட்டாயமாக்கும் திட்டம் இல்லை.. சர்ச்சைக்கு மத்தியில் UIDAI விளக்கம்..!



