செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஆயிரக்கணக்கான கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களின் முன்னேற்றத்தையும், அவர்களின் நிலையையும் மேம்படுத்தும் நோக்கில் பிரதான் மந்திரி சுகன்யா சம்ரித்தி யோஜனாவை எனப்படும் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், பெற்றோர் தங்கள் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெயரில் வங்கி அல்லது தபால் நிலையத்தில் கணக்கைத் தொடங்கலாம்.
இந்த கணக்கை பூஜ்ஜிய இருப்பில் தொடங்கினாலும், ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 செலுத்த வேண்டும். மேலும், அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை செலுத்தலாம். தற்போது, இத்திட்டத்தில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது. கணக்குத் தொடங்கிய தேதியில் இருந்து 14 ஆண்டுகள் வரை பணம் செலுத்த வேண்டும். பிறகு, 21 வயது பூர்த்தி அடைந்ததும் கணக்கு வைத்திருப்போருக்கு திருமணம் போன்ற நிகழ்வுகளின் போது அசல் மற்றும் வட்டி தொகை வழங்கப்படும்.
ஆனால், சத்தீஸ்கர் மாநிலம் தாம்ட்ரி மாவட்டத்தில், செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் கணக்குத் தொடங்கிய பிறகு பெற்றோர்கள் நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்த முன்வராததால், பல கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தாம்ட்ரியில் சுமார் 24,600 பெற்றோர்கள் தங்கள் மகள்களின் பெயரில் தபால் நிலையத்தில் கணக்குகளைத் தொடங்கியுள்ளனர். ஆனால், தற்போது 10,600 கணக்குகளில் மட்டுமே தொடர்ந்து பணம் செலுத்தப்படுகிறது. அதேசமயம், 14,000 கணக்குகளில் பணம் செலுத்தப்படாததால், அவை செயலிழந்ததாக கூறப்படுகிறது.
இத்திட்டத்தில் கணக்கு தொடங்கி, பணம் செலுத்தாமல் இருக்கும் கணக்குகளை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றால், பெற்றோர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், அபராதம் செலுத்த வேண்டும். தற்போது அந்த கணக்கை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றால், பெற்றோர்கள் ஆண்டுக்கு ரூ.250 செலுத்த வேண்டும்.
Read More : உலக சந்தையை உலுக்கிய டிரம்பின் வரி விதிப்பு.. 7 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய P&G நிறுவனம் முடிவு..!!