பல இளைஞர்களின் கனவாக அமைந்த துபாயில் ஒரு இளம் இந்தியப் பெண்ணின் அனுபவம் நகரத்தின் பணி கலாச்சாரத்தின் அடித்தளத்தை அம்பலப்படுத்துகிறது. இந்தியாவில் தனது படிப்பை முடித்த பிறகு தனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப நம்பிக்கையில் 21 வயதில் விசிட் விசாவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு குடிபெயர்ந்தார்
இரண்டு மாதங்களில் ஐந்து வேலைகளில் பணி புரிந்து கடுமையான மன அழுத்தங்களையும் அவமானங்களையும் எதிர்கொண்டதாகக் கூறுகிறார். இதுகுறித்து அவர் பதிவில், முதல் வேலையில் ஒரு நிருவனத்தில் வேலைக்கு தேர்வான பிறகும், அந்த பெண்ணுக்கு அதிகாரப்பூர்வ கடிதம் (Offer Letter) வழங்கப்படவில்லை. “நாளை பணி தொடங்கு” என்ற கடுமையான உத்தரவுடன், எந்தவிதமான வர்த்தமான சட்டப்பூர்வ ஆவணமும் இல்லாமல் பணிக்கு அழைக்கப்பட்டார். இதனால், தொழில்முறை பாதுகாப்பு இன்றி செயல்பட வேண்டிய அவல நிலை ஏற்பட்டது என தெரிவித்தார்.
இரண்டாவது நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்ட பிறகு, நீ அழகாகவும், சிறப்பாகவும் இல்லை எனக் கூறி அவமானப்படுத்திய முதலாளி, அவரின் தனிப்பட்ட மொபைல் எண்ணை விற்பனை அழைப்புகளுக்குப் பயன்படுத்தக் கட்டாயப்படுத்தினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது பணி நீக்கம் செய்யப்பட்டார்.
மூன்றாவது நிறுவனம், பணியாளருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முன் “விசா செயலாக்கம் செய்யப்படும்” என உறுதியளித்தது. ஆனால், பின்னர் அந்த நிறுவனமானது உண்மையில் வேலையில் நிரந்தரமாக அமர்த்தும் எண்ணமில்லாமல், வெறும் விசிட் விசா (Visit Visa) மூலம் அழைத்து, குறுகிய கால பணிக்கு மட்டுமே பயன்படுத்தி விட்டது.
அதேபோல், நான்காவது நிறுவனத்தில் நிலைமைகள் இன்னும் மோசமாக இருந்தது. வேலையின் நிலைத்தன்மை குறித்த எந்த உறுதியும் இல்லாமல், நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களின் தொடர்பு விபரங்களை (customer leads) தேடச் சொல்லி, தனிநபருக்கு அழைப்புகள் விடுக்க கட்டாயப்படுத்தப்பட்டது. மேலும், இந்த வேலைக்கு என்ன மாதிரியான ஊதியம் வழங்கப்படும் என்பது குறித்து தெளிவான தகவல் எதுவும் வழங்கப்படவில்லை.
ஐந்தாவதாக தென்னிந்தியர்கள் நடத்தும் ஒரு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அங்கு அவளுடைய தோற்றத்தை வைத்து மேலாளரால் அவமானப்படுத்தப்பட்டார். விற்பனை வளர்ச்சி (Sales Development) எனப்படும் வேலையில் சேர்ந்திருந்த அவர், தொழில்முறைத் திறனைக் காட்டிலும் தனது தோற்றத்தை முன்னிறுத்தவே மேலாளரால் கட்டாயப்படுத்தப்பட்டார்.
“மேக்கப் போடு, உடலை காட்டு.. வாடிக்கையாளர்களை ஈர்க்க இதுதான் வழி” என நேரடியாகக் கூறிய மேலாளர் அவ்வாறு செய்ய கட்டாயப்படுத்தியதாக அந்த பெண் குற்றம் சாட்டினார். இத்தகைய நடவடிக்கைகள் வேலைக்கான அடிப்படை மரியாதையையும், பெண் தொழிலாளர்களின் உரிமையையும் முற்றிலும் புறக்கணிக்கும் விதமாக இருந்ததாக அந்த பெண் கூறினார்.
இந்நிகழ்வு, பல நிறுவனங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் உடல் தோற்ற அடிப்படையிலான மதிப்பீடுகளும், தொழில்முறை பாதுகாப்பு பற்றிய கவலையையும் வெளிப்படுத்துகிறது. தொடர்ந்து அவர் பதிவில், “துபாய் ஒரு தொழிலைத் தொடங்க சிறந்த இடம். ஆனால் 9 மணி முதல் 6 மணி வரை வேலை செய்யும் சாதாரண மனிதர்கள் இங்கு இல்லை. இந்த நகரம் மங்கலானது. மிக சிலருக்கே பளபளப்பைக் காட்டும் ஒரு முகமூடி நகரம் தான் துபாய்.” என கூறினார்.
Read more: BREAKING| பள்ளி வளாகத்தில் போர் விமானம் விழுந்து விபத்து.. ஒருவர் பலி..!! மாணவர்களின் நிலை என்ன..?