தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று இடைக்கால பொது பட்ஜெட் மற்றும் இடைக்கால வேளாண் பட்ஜெட் இரண்டும் ஒரே நாளில் தாக்கல் செய்யப்பட்டன.. அதன்பின்னர் சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது.. இதை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 20-ம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்த விவாதம் பேரவையில் இன்று தொடங்கியது.. அப்போது திமுகவின் போராட்டம்வே 7.5% இட ஒதுக்கீட்டுக்கு காரணம் என்று சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்..
தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது “ விளம்பரம் தேடும் செயலில் மட்டுமே தமிழக அரசு ஈடுபடுகிறது.. நாங்கள் செய்ததை கூட சொல்லி விளம்பரம் தேடிக் கொண்டது இல்லை.. திமுக, அதிமுக ஆட்சியை சேர்த்து தான் 11.19% வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு யாரும் கேட்காமல் மருத்துவப் படிப்பில் 7.5% ஒதுக்கீட்டை அதிமுக வழங்கியது.. அதிமுகவின் 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கு திமுக சொந்தம் கொண்டாடுவதா? 7.5 சதவீத ஒதுக்கீடு குறித்து திமுக எப்போதாவது பேசியது உண்டா? ஏதாவது ஆதாரத்தை காட்டுங்கள்.. உண்மைக்கு புறம்பான தகவல்கள் பேசப்படுகின்றன..
இவ்வளவு பேசுகிறீர்களே.. நீட் தேர்வை உங்களால் ரத்து செய்ய முடிந்ததா? நீட் தேர்வு வாக்குறுதியில் நீங்கள் ஏதாவது சாதித்து உண்டா? நீட் தேர்வு விலக்கு வாக்குறுதில் இதுவரை நீங்கள் ஒன்றும் செய்ததில்லை.. மா.சுப்பிரமணியன் எதை கூறினாலும் தவறாக தான் கூறுகிறார். உண்மைக்கு மாறான கருத்தை அமைச்சர் கூறியதால் தான் இவ்வளவு பிரச்சனை.. மாணவர்களுக்கு படிக்கும் போது மடிக்கணினி கொடுக்காமல் படித்து முடித்த பின் கொடுத்து என்ன பயன்?” என்று பேசினார்..



