ஆண் நண்பருடன் சாலையில் நடந்து சென்ற ஐஐடி மாணவியை மானபங்கம் செய்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மும்பை பவாய் பகுதியில் உள்ள ஐஐடியில் அந்த 19 வயது இளம்பெண் படித்து வந்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு நவி மும்பையில் வசிக்கும் ஆண் நண்பரை சந்திக்க சென்றிருக்கிறார். பின்னர் மீண்டும் அதிகாலை 3.45 மணியளவில் பவாய் செல்ல சான்படா ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். ஆண் நண்பருடன் பால்ம்பீச் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தீபக் ராத்தோடு என்கிற 30 வயதுடைய போலீஸ்காரர், சந்தேகத்தின் பெயரில் இரண்டு பேரையும் விசாரித்துள்ளார். இருவரும் சரியாக பதில் அளிக்காததால் அந்த போலீஸ் காரர் தகாத முறையில் அவர்களை பேசியிருக்கிறார்.

பின்னர் மாணவியின் செல்போனை தருமாறு கேட்டுள்ளார். மாணவி தரமறுத்து பிடிவாதம் செய்ததால் மானபங்கம் செய்திருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவி பவாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் சம்பவம் நடந்த இடம் சான்படா என்பதால் இந்த வழக்கு அங்கு மாற்றப்பட்டு இருக்கிறது. அதன்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை மானபங்கம் செய்த போலீஸ்காரர் தீபக் ராத்தோடுவை கைது செய்துள்ளனர். மேலும், அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டுள்ளார்.