சிவப்பு எறும்பை சட்னி வைத்து சாப்பிடும் பழக்கம் நம் இந்தியாவில் தான் நடக்கிறது என்றால், உங்களால் நம்ப முடிகிறதா..? இது உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். இருப்பினும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் உள்ள மக்கள் ஈசலை விளக்கு வைத்து சேகரித்து, அதைக் கொண்டு புட்டு செய்து சாப்பிடுவதை கேள்விப்பட்டிருப்பீர்கள். குறிப்பாக இதுபோன்ற விநோத உணவுப் பழக்கங்கள் எல்லாமே பாரம்பரியம் என்ற பெயரில் நடக்கும். அவை நம் உடல் நலனுக்கு மிக நல்லது என்ற எண்ணம் மேலோங்கியிருக்கும். அந்த வகையில், கர்நாடகாவில் தான் சிவப்பு எறும்பை சட்னி வைத்து சாப்பிடுகின்றனர். யூடியூபில் மாங்காய் சட்னி, கீரை சட்னி, அன்னாசி சட்னி என்று வெவ்வேறு சமையல்களை கேள்விப்பட்டிருக்கும் நமக்கு இது கொஞ்சம் ஆச்சரியமான விஷயம் தான்.
உத்தார கன்னடா பகுதியில் வாழும் சித்திஸ் இன மக்கள் தான் இந்த சிவப்பு எறும்பு சட்னியை செய்து சாப்பிடுகின்றனர். கர்நாடகத்தில் பெரும்பாலும் வனப் பகுதிகளிலும், அதையொட்டிய இடங்களில் சித்திஸ் இன மக்கள் வசித்து வருகின்றனர். வனப்பகுதிகளில் மிகுதியாக வளருகின்ற சிவப்பு எறும்புகள் இவர்களின் உணவு தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும், காடுகளில் கிடைக்கும் கிழங்கு, பழங்கள் போன்றவை தான் பெரும்பாலும் இவர்களின் உணவாக இருக்கிறது. மரங்களில் பெரிய அளவில் கூடு கட்டி வாழும் எறும்புகள் மீது, அவற்றை கொல்வதற்காக உப்பு தூவப்படுகிறது. பின்னர் எறும்பு மற்றும் அதன் முட்டையோடு சேகரிக்கின்றனர். இதையடுத்து, அதை ஒரு கடாயில் கொட்டி இஞ்சி, கறிவேப்பிலை, கடுகு, சீரகம், மஞ்சள் போன்றவற்றை சேர்த்து வறுக்கின்றனர். வறுத்த எறும்பு மசாலாவை கற்கள் மீது வைத்து அரைக்கின்றனர். இப்போது எறும்பு சட்னி தயாராகிவிட்டது. இந்த உணவின் சுவை சித்திஸ் மக்களுக்கு மட்டுமே தெரியும்.