மனிதன் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடனும், அதிக ஆயுளுடனும் வாழ்வதற்கு தேவையான எளிய உணவு முறைகளை பழங்காலச் சித்தர்கள் தங்கள் பாடல்களிலும் சுவடிகளிலும் பதிவு செய்து வைத்துள்ளனர். மனித உடல் சீராக இயங்க, எப்போது, எப்படிச் சாப்பிட வேண்டும், எந்த உணவுகளைச் சேர்க்க வேண்டும், எவற்றை தவிர்க்க வேண்டும் என்பதில் சித்த மருத்துவம் பல நுட்பமான ஆலோசனைகளை வழங்குகிறது.
தேநீர் பழக்கம் வேண்டாம் : காலையில் எழுந்ததும் காபி, டீ போன்ற பானங்களுக்குப் பதிலாகத் துளசி டீ அல்லது சித்தரத்தை டீ அருந்துவதை சித்த மருத்துவம் பரிந்துரைக்கிறது. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பலமடைய செய்து, நோய்கள் அண்டாமல் காக்கும்.
காலையில் இஞ்சி, பகலில் சுக்கு, இரவில் கடுக்காய் : பிரபலமான சித்த மருத்துவப் பாடல் கூறுவது போல், ஒரு மண்டல காலத்திற்கு (48 நாட்கள்) தொடர்ந்து, காலையில் சிறிதளவு இஞ்சி, பகல் உணவில் சுக்கு, மற்றும் இரவில் படுக்கும் முன் கடுக்காய் (ஏதாவது ஒரு வடிவில்) எடுத்துக்கொள்வது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது செரிமான மண்டலத்தைச் சீராக்கி, உடலில் தேங்கும் நச்சுக் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.
ரசம் மற்றும் தயிரின் முக்கியத்துவம் : நம் பாரம்பரிய உணவான ரசத்தை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது. கொள்ளு, தூதுவளை, வேப்பம்பூ போன்றவற்றைச் சேர்த்துச் செய்யப்படும் ரசம் உடலுக்கு மிகுந்த பலன்களைத் தரும். மேலும், “மூத்த தயிர் உண்போம்” என்று சித்தர்கள் கூறியுள்ளனர். தயிர் போன்ற புரோபயாடிக் உணவுகளைச் சேர்ப்பது, குடலில் நல்ல பாக்டீரியாக்கள் வளரத் துணை புரிந்து, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிடுவது இதய நோய்கள் வருவதைத் தடுக்கிறது.
நார்ச்சத்து மற்றும் மண் சார்ந்த உணவுகள் : உடல் இயக்கத்தை சீராக வைத்திருக்க, பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், மற்றும் கீரைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன், கேசம், தோல், எலும்பு போன்றவற்றை பலப்படுத்த, நிலத்தடியில் விளையும் கிழங்கு வகைகள், காய்கறிகள் போன்ற மண் சார்ந்த உணவுகளையும் உண்ண வேண்டும் என்று சித்தர்கள் பரிந்துரைக்கின்றனர். கொழுப்பு, இரத்தம், பித்தம் ஆகியவற்றைச் சமநிலையில் வைத்திருக்க, தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்வது நல்லது.
வயிறு முட்டச் சாப்பிடக் கூடாது : ஆரோக்கியமான வாழ்வுக்கு உணவுப் பழக்கம் மட்டும் போதாது, சாப்பிடும் அளவும் முக்கியம். எவ்வளவு ருசியான உணவாக இருந்தாலும், வயிற்றில் பாதி உணவு, கால் பங்கு தண்ணீர், மீதி கால் பங்கு காற்றுக்கு இடம் விடுவது அவசியம் என்று சித்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஒரே ஒரு நாள் மட்டும் விதிகளை மீறிச் சாப்பிட்டாலும், அன்றைய தினமே கட்டாயம் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி மேற்கொண்டு அதைச் சமன் செய்ய வேண்டும்.
தவிர்க்க வேண்டிய உணவுப் பழக்கங்கள் : பசி இல்லாதபோது உணவை உட்கொள்ளக் கூடாது. நன்கு பசித்த பிறகு மட்டுமே உணவைச் சாப்பிட வேண்டும். காலையில் இயற்கை உபாதைகளைக் கழிக்காமல் உணவு சாப்பிடக் கூடாது. மேலும், முரண்பட்ட தன்மையுள்ள உணவுகளான தேனையும் நெய்யையும் சம அளவில் கலப்பதும், வாழைப்பழத்துடன் தயிர் அல்லது மோர் கலந்து சாப்பிடுவதும் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும் என்று சித்த மருத்துவம் எச்சரிக்கிறது.
Read More : உங்கள் ஜாதகத்தில் இருக்கும் தோஷம் நீங்க இதை செய்தாலே போதும்..!! இந்த கிழமைகளை மட்டும் மறந்துறாதீங்க..!!