இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஆர். நல்லகண்ணு (வயது 100), மீண்டும் உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுமார் ஒன்றரை மாத சிகிச்சைக்குப் பிறகு கடந்த வாரம் தான் அவர் வீடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டதால், நல்லகண்ணு முதலில் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதன் பிறகு, அவருக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அனுபவம் வாய்ந்த மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழு அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தது.
சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) அன்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு திரும்பினார். இந்தச் சூழலில், வியாழக்கிழமை காலை நல்லகண்ணுவுக்கு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், அவர் உடனடியாக மீண்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது கட்சித் தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More : “சமரசமே கிடையாது.. கோர்ட்ல பாத்துக்கலாம்”..!! மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!