நவம்பர் மாதம்னு சொன்னாலே நமக்கு நினைவுக்கு வர்ற விஷயம் ‘நோ ஷேவ் நவம்பர்’. ஆனா, இதை ஏன் ஆரம்பிச்சாய்ங்க.. எதுக்கு ஆரம்பிச்சாய்ங்கனு புரியாமலேயே பல நவம்பர்களைக் கடந்திருப்போம். இப்போவாச்சும் தெரிஞ்சிக்கலாம் வாங்க…

‘நோ ஷேவ் நவம்பர்’ ன்னா என்ன?
உலகம் முழுவதிலும் இருக்கும் ஆண்கள் தங்கள் குழுக்களுக்குள் முடிவு செய்து இந்த நவம்பர் மாதம் முழுக்க ஷேவிங் ரேஸரைக் கையில் தொடாமல் இருக்க வேண்டும். சிலர் இதை ஒரு போட்டியாகவும் நடத்தி, இந்த மாதத்தின் முடிவில் தங்கள் குழுவில் யாருக்கு அதிகமாக தாடி வளர்ந்திருக்கிறது எனப் பார்த்து வெற்றியாளரை முடிவு செய்வார்கள்.

எங்கே தொடங்கியது இந்தப் பழக்கம்?
சிகாகோவில் வசித்த சகோதரர்கள் தங்களின் தந்தை 2009ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்ததையொட்டி இந்த ஷேவ் செய்யாமல் இருக்கும் விரதத்தைக் கடைபிடிக்கத் தொடங்கினார்களாம். அப்போது முதல் மெதுவாகப் பரவ ஆரம்பித்த இந்த ட்ரெண்ட், இப்போது பல நாடுகளிலும் காரணம் தெரியாமலேயே பின்பற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. பிறகு இதற்கென ஒரு மாதத்தையும் முடிவு செய்து கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள்.

எதற்காகத் தொடங்கப்பட்டது?
பலரும் நினைப்பதைப் போல ‘நோ ஷேவ் நவம்பர்’ (No Shave November) என்பது ஆண்கள் ஸ்டைலாக தாடி வளர்த்து ரசித்துக் கொள்வதற்காகவும், கவன ஈர்ப்பிற்காகவும் அல்ல. ப்ரோஸ்டேட் கேன்சர் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காகத்தானாம். இதன் குறிக்கோள், பொதுவாக ஆண்கள் கட்டிங், ஷேவிங்குக்கு ஒருமாதம் முழுக்கப் பயன்படுத்தும் தொகையைச் சேமித்து வைத்துப் புற்றுநோய் ஆராய்ச்சி மையங்களுக்கு நன்கொடையாக அளிப்பதற்குத்தான். புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் சிறிது சிறிதாக முடியை இழக்கத் தொடங்குவார்கள். அதைக் கனெக்ட் செய்யும் விதமாகவே புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஷேவ் செய்யாமல், முடி வெட்டாமல் இருப்பது கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், பலர் இதன் உண்மையான நோக்கத்தை அறியாமல் விளையாட்டாக ஹேஷ்டேக்கோடு போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்கின்றனர்.
நாம் என்ன செய்யலாம்?
‘நோ ஷேவ் நவம்பர்’ யுத்திக்காக தாடியோடு இருக்கும் போட்டோவை ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும், இன்ஸ்டாகிராமிலும் பதிவேற்றி லைக்ஸ் வருதான்னு குத்தவெச்சு எண்ணிக் கொண்டிருக்காமல், நம்மால் முடிந்தவரை பலவகைப் புற்றுநோய்களைப் பற்றிப் பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தலாம்.