அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களை முறைப்படுத்த உருவாக்கப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து, தவெக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது..
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. பொதுக்கூட்டங்கள் நடப்பதற்கு 30 நாட்களுக்கு முன் அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதி தன்னிச்சையானது என்று தவெக தரப்பு வாதிட்டது.. ஒரு நாளில் ஒரே இடத்திற்கு பல கட்சிகள் விண்ணப்பித்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கே முன்னுரிமை என்பது சரியா.? அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பது பாரபட்சமானது என தவெக சார்பில் வாதிடப்பட்டது..
அப்போது நீதிபதிகள் “ கரூர் வேதனை சம்பவத்துக்கு பின் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் வகுத்த வழிகாட்டு விதிகளில் என்ன தவறு உள்ளது? வருமான வரி விலக்கு பெறுவதற்காக பல கட்சிகள் காளான்கள் போல் துவங்கப்படுகிறது, அவை தேர்தலில் போட்டியிடுவதில்லை.. பல தேர்தலில் போட்டியிட்டு எம்.பி, எம்.எல்.ஏக்களை பெற்ற நீண்ட வரலாறு கொண்ட கட்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்தால் என்ன தவறு? தவெக இதுவரை எத்தனை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளது?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினர்..
அரசு தரப்பில் “ பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த வழிமுறைகளை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், தவெக மட்டும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.. சேலத்தில் வெயில் காரணமாக ஒருவர் இறந்த பிறகு தான், வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் தவெக தலைமை மேற்கூரை அமைத்துள்ளது..” என்று தெரிவிக்கப்பட்டது..
இதையடுத்து அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் பெறுவது குறித்து அரசு ஏன் பரிசீலிக்க கூடாது..? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தவெக வழக்கில் 3 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்..



