தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை, அவரின் தாயின் தந்தையான தாத்தா பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 13.02.2024 அன்று புகாரளிக்கப்பட்டது. தனது 7 வயது மகளை, தனது தந்தை வைரவன் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சிறுமியை அவரது தாத்தாவை அடிக்கடி மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தொடர்ந்து 3 மாதங்களாக சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். மேலும், வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். மேலும், அரிவாளால் சிறுமியின் காலிலும் வெட்டியுள்ளார்.
இந்நிலையில், 14.02.2024 அன்று வைரவனை போலீசார் கைது செய்த நிலையில், 23.04.2024 அன்று இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு தேனி மாவட்ட முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி கணேசன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இதில், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சிறப்பு சட்டப்பிரிவின் கீழ் வைரவனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
அபராதத் தொகையை செலுத்த தவறினால், மேலும் ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், மேலும் இந்திய தண்டனைச் சட்டம் 376 (AB)ன் கீழ் ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், இந்திய தண்டனைச் சட்டம் 506(ii) ன் படி 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராதத் தொகையை கட்ட தவறினால் ஒரு மாத கடுங்காவல் தண்டனையும் என மொத்தம் ரூ.12,000 அபராதமும், எஞ்சியுள்ள வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார்.
மேலும், சிறுமி பாதிக்கப்பட்டிருப்பதால், அவருக்கு ஒரு மாதத்திற்குள் ரூ.9,88,000 வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, சிறுமியின் கல்வி பராமரிப்பு மற்றும் மருத்துவ செலவுக்காக ரூ.1,88,000-ஐ உடனடியாகவும், மீதமுள்ள ரூ.8 லட்சத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நிரந்தர வைப்பு நிதியாக சேமித்து, 2 மாதங்களுக்கு ஒருமுறை அதிலிருந்து வரும் வட்டியை சிறுமிக்கு வழங்க வேண்டுமென நீதிபதி கணேசன் தீர்ப்பு வழங்கினார்.