திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய காதலியை தனியாக அழைத்துச் சென்று துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் மேலஉளூர் பகுதியைச் சேர்ந்தவர் அகல்யா 26). இவர், டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக அங்குள்ள மாவட்ட மைய நூலகத்தில் படிப்பதற்காக தினமும் தனியார் பஸ்சில் வந்து சென்றுள்ளார். கடந்த 6ஆம் தேதி முதல் அகல்யாவை காணவில்லை என்பதால், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். இந்நிலையில், வடசேரி பாசன வாய்க்காலில் இளம்பெண் உடல் கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், காணாமல் போன அகல்யா என்பது தெரியவந்தது. உடலை கைப்பற்றி, சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையை தொடங்கினர். மேலும், அகல்யாவின் மொபைல் எண்ணை வைத்து, அவருக்கு வந்த அழைப்புகளைச் சோதனை செய்தனர். அதில், தஞ்சாவூர் ஞானம் நகரை சேர்ந்த நாகராஜ் (25) என்பவர் கடைசியாகத் தொடர்பு கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நாகராஜைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நாகராஜ் தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை வழித்தடத்தில் இயங்க கூடிய தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அப்போது மேலஉளூரில் இருந்து தினமும் தஞ்சாவூருக்கு வரும் அகல்யாவுடன் கடந்த 3 மாதங்களாகப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ,இருவரும் காதலித்து வந்துள்ளனர். மேலும், அடிக்கடி இருவரும் வெளியில் சுற்றி வந்துள்ளனர். அப்போது நாகராஜ் திருமணமானவர் என அகல்யாவுக்கு தெரியவந்ததுள்ளது. இருப்பினும், தன்னையும் திருமணம் செய்துகொள்ளக் கூறி வற்புறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 6ஆம் தேதியன்று அகல்யாவை காரில் அழைத்துச் சென்ற நாகராஜ், புதுக்கோட்டை சாலை பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து, துப்பட்டாவால் அகல்யாவின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் காரில் அவரது உடலை வைத்துக்கொண்டு அன்றிரவு வடச்சேரி வாய்காலில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.