ரயில் பயணத்தின்போது கவனக்குறைவால் செல்போன், பர்ஸ் அல்லது வேறு ஏதேனும் முக்கியமான பொருள்கள் கீழே விழுந்துவிட்டால், பதற்றப்படாமல் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய அவசர வழிமுறைகளை ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்காக வெளியிட்டுள்ளது.
கம்ப எண்ணைக் குறித்துக் கொள்ளுங்கள் (Pole Number): உங்கள் பொருள் எந்த இடத்தில் கீழே விழுந்ததோ, அந்த ரயில் தண்டவாளத்தின் ஓரத்தில் நிறுவப்பட்டிருக்கும் மின்சார கம்பம் அல்லது கிலோமீட்டர் கல்லில் மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தில் எழுதப்பட்டுள்ள எண் மற்றும் குறியீட்டை (உதாரணமாக: 47/12) உடனடியாக குறித்துக்கொள்வது மிக அவசியம். இந்த எண் தான், விழுந்த இடத்தை துல்லியமாக கண்டறிய அதிகாரிகளுக்கு உதவும் முக்கிய ஆதாரமாகும்.
ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் : நீங்கள் குறித்து வைத்த கம்ப எண்ணை உடனடியாக பயணச்சீட்டுப் பரிசோதகர் அல்லது ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். விழுந்த பொருளின் முழு விவரம் (மாடல், நிறம்) மற்றும் நீங்கள் குறித்த கம்ப எண்ணை அவர்களிடம் ஒப்படைக்கவும்.
உதவி எண்களுக்கு அழையுங்கள் : ரயில்வே ஹெல்ப்லைன் எண் 139 அல்லது RPF உதவி எண் 182 ஆகியவற்றுக்கு அழைத்தும் நீங்கள் புகார் தெரிவிக்கலாம்.
கட்டாயம் செய்யக்கூடாதது என்ன..?
செல்போன் விழுந்ததற்காக பலரும் செய்யும் மிகப் பெரிய தவறு, அவசர சங்கிலியை இழுப்பது ஆகும். இது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இதனால் பயணிகளுக்கு ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று ரயில்வே எச்சரித்துள்ளது.
புகார் பதிவு செய்வது எப்படி..?
அடுத்த ரயில் நிலையத்தை அடைந்தவுடன், அங்குள்ள ரயில்வே காவல் படை (RPF) அல்லது அரசு ரயில்வே போலீஸ் (GRP) அலுவலகத்திற்கு சென்று முறையான முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய வேண்டும். புகார் அளிக்கும்போது ரயில் எண், இருக்கை எண், நீங்கள் குறித்து வைத்த கம்ப எண் மற்றும் உங்கள் அடையாளச் சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.
பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில், ரயில்வே பாதுகாப்புப் படையினர் குறிப்பிட்ட பகுதிக்குச் சென்று தேடுதல் பணியில் ஈடுபடுவார்கள். செல்போன் மீட்கப்பட்டவுடன், உரிய அடையாளச் சான்று மற்றும் உரிமையை நிரூபிக்கும் தகவல்களைச் சரிபார்த்த பிறகு, உங்களிடம் ஒப்படைக்கப்படும். எனவே, பயணிகள் பதட்டப்படாமல் இந்த வழிமுறைகளை முறையாகப் பின்பற்றினால், இழந்த பொருளை மீண்டும் பெற வாய்ப்புள்ளது.



