2026-ஆம் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டில் தங்கம் சுமார் 70 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து, வரலாற்றில் இல்லாத வகையில் லாபத்தை அள்ளிக் கொடுத்தது. இந்த அதிரடி உயர்வு நடப்பு ஆண்டிலும் தொடருமா என்பது குறித்து பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் தளத்தில் விரிவான விளக்கத்தை அளித்துள்ளார்.
ஆனந்த் சீனிவாசன் குறிப்பிடுகையில், சர்வதேச சந்தையில் தங்கம் தற்போது ஓரளவுக்கு சரிவை சந்தித்திருப்பதாக தெரிவித்தார். 1979-ஆம் ஆண்டிற்குப் பிறகு கடந்த 2025-இல் தான் தங்கம் விலை இவ்வளவு பெரிய ஏற்றத்தைக் கண்டது. ஆனால், 2026-ஆம் ஆண்டில் கடந்த ஆண்டைப் போன்ற பிரம்மாண்ட லாபத்தை எதிர்பார்க்க முடியாது; அதில் பாதியளவு லாபம் கிடைக்கவே வாய்ப்புகள் அதிகம் என்று அவர் கணித்துள்ளார். அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகித குறைப்பு குறித்த தெளிவற்ற சூழலே இதற்கு முக்கியக் காரணம் என்று அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, அங்கு நிலவும் பணவீக்கம் மற்றும் டாலரின் மதிப்பு ஆகியவற்றால் வட்டி விகிதங்கள் உடனடியாக குறைக்கப்பட வாய்ப்புகள் குறைவு. அமெரிக்க வட்டி விகிதக் குறைப்பைப் பொறுத்தே தங்கத்தின் விலை உயர்வு அமையும். எனவே, தங்கம் விலை கிராமிற்கு 18,000 ரூபாயை தாண்டும் என அதீத எதிர்பார்ப்புடன் இருக்க வேண்டாம்; அது 14,000 முதல் 15,000 ரூபாய் என்ற அளவில் நகரக்கூடும் என அவர் கூறியுள்ளார். மேலும், ஒரேடியாக முதலீடு செய்யாமல் தங்கத்தை சிறுகச் சிறுக வாங்குவதே (SIP முறை) பாதுகாப்பான முதலீட்டு முறையாக இருக்கும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை, அது இன்னும் உச்சத்திலேயே நீடிப்பதாக தெரிவித்த அவர், வாங்கும் விலைக்கும் விற்கும் விலைக்கும் உள்ள வித்தியாசத்தைக் கவனிக்க வேண்டும் என்றார். சுருக்கமாகச் சொன்னால், 2026-ஆம் ஆண்டு தங்க முதலீட்டாளர்களுக்கு ஒரு மிதமான லாபம் தரும் ஆண்டாக இருக்குமே தவிர, கடந்த ஆண்டை போல ‘தாறுமாறான’ லாபத்தைக் கொடுக்காது என்பதே அவரது கணிப்பு. எனினும், இவை சந்தை குறித்த ஒரு பார்வை மட்டுமே என்பதால், முதலீட்டு முடிவுகளை எடுக்கும் முன் முறையான பொருளாதார ஆலோசகர்களை அணுகுவது அவசியம்.



