ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி திதியில் சிவ வழிபாடு செய்வது மன அமைதி, செல்வ வளம் மற்றும் வாழ்வில் நிலைத்தன்மை ஆகியவற்றைப் பெற்றுத் தரும் என்பது ஐதீகம். பௌர்ணமி நாளில் சிவ தரிசனம், கிரிவலம், விரதம், மற்றும் புனித நீராடுதல் ஆகியவை விசேஷ பலன்களை அளிப்பதுடன், பாவங்களைப் போக்கி சிவனின் அருளையும் பெற்றுத் தரும். அதிலும், நினைத்தாலே முக்தி தரும் புண்ணிய தலமான திருவண்ணாமலையில் பௌர்ணமியில் கிரிவலம் வருவது முக்தியை அருளக்கூடியதாகும்.
கார்த்திகை பௌர்ணமியின் சிறப்பு :
பொதுவாக அனைத்துப் பௌர்ணமி நாட்களிலும் திருவண்ணாமலை கிரிவலம் செல்வது சிறப்புதான். இருப்பினும், சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் பௌர்ணமிகள் கூடுதல் பலன் தரக்கூடியவை. ஐப்பசி பௌர்ணமி எப்படி சிறப்பு வாய்ந்ததோ, அதேபோல் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமியும் மிகவும் விசேஷமானதாகும்.
ஜோதி வடிவம்: கார்த்திகை பௌர்ணமி நாளில்தான் சிவபெருமான், விஷ்ணு மற்றும் பிரம்மாவிற்கு ஜோதி வடிவமாகக் காட்சியளித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
அர்த்தநாரீஸ்வரர்: கிரிவல வழிபாடு தோன்றியதும், அன்னை பார்வதிக்குத் தனது உடலில் பாதியைக் கொடுத்து ஈசன் அர்த்தநாரீஸ்வரராகக் காட்சியளித்ததும் இதே கார்த்திகை பௌர்ணமி நாளில் தான் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.
கிரிவலம் செல்ல உகந்த நாள் மற்றும் நேரம் :
வழக்கமாக, கார்த்திகை மாதப் பௌர்ணமியும், கார்த்திகை நட்சத்திரமும் இணைந்து வரும் நாளையே நாம் திருக் கார்த்திகை தீபத் திருநாளாகக் கொண்டாடுகிறோம். ஆனால் இந்த ஆண்டு கார்த்திகை தீபம் டிசம்பர் 3ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பௌர்ணமி திதி டிசம்பர் 4ஆம் தேதிதான் தொடங்குகிறது.
எனவே, கார்த்திகை பௌர்ணமிக்காக திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லத் திட்டமிட்டிருக்கும் பக்தர்கள், டிசம்பர் 4ஆம் தேதி வியாழக்கிழமை தான் கிரிவலத்தைத் தொடங்க வேண்டும். பக்தர்கள் டிசம்பர் 4ஆம் தேதி காலை 7:37 மணிக்குத் துவங்கி, டிசம்பர் 5ஆம் தேதி அதிகாலை 3:40 மணிக்குள்ளாக தங்கள் கிரிவல வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும்.
வியாழக்கிழமை கிரிவலத்தின் கூடுதல் பலன் :
இந்த ஆண்டு கார்த்திகை பௌர்ணமியானது திருக்கார்த்திகை தீபத் திருநாளுக்கு அடுத்த நாள் வருகிறது. டிசம்பர் 4ஆம் தேதி மாலை 3:08 மணி வரை கிருத்திகை நட்சத்திரம் இருப்பதால், அன்றைய தினம் காலையிலேயே கிரிவலத்தைத் துவங்குவது மிகவும் சிறப்பானதாகும்.
வியாழக்கிழமையில் கிரிவலம் செல்வதால் ஞானம் பெருகும்; குருவின் அருளும் கிடைக்கும். பல ஜென்மப் பாவங்கள் நீங்குவதுடன், இறந்த முன்னோர்களுக்கான இறுதிச் சடங்குகள் மற்றும் பித்ரு தர்ப்பணக் கடமைகளைச் சரியாகச் செய்யாதவர்கள், இந்த வியாழக்கிழமை கிரிவலம் செல்வதால் அந்தப் பாவங்களும் நீங்கிவிடும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நேரத்தில் மலை உச்சியில் எரியும் மகா தீபத்தைத் தரிசித்தபடியே கிரிவலம் வருவது, பக்தர்கள் பல கோடி புண்ணியங்களைப் பெற்றுத் தரும் என்பது உறுதி.



