உடல் ஆரோக்கியத்துக்காகத்தான் உணவு சாப்பிடுகிறோம். அதனால், நாம் உண்ணும் உணவை கவனத்தோடு தேர்ந்தெடுக்கவேண்டும். நாம் இயங்க ஆற்றல் தேவைப்படுகிறது. அந்த ஆற்றலைத் தருவது உணவு. இந்த ஆற்றல், உடலுக்கு ஊட்டச்சத்துக்களை அளிப்பதன் மூலமே நமக்குக் கிடைக்கிறது. இந்த ஆற்றலினால்தான் உடல் இயங்குகிறது. மனம் சிந்திக்கிறது, செயல்படுகிறது. எனவே, நமது வாழ்வையே தீர்மானிக்கும் உணவைப் பற்றி நமது முன்னோர்கள் கூறும் நம்பிக்கைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
காலை, இரவு என்று இரண்டு வேளைகள் உண்பதை மட்டுமே இல்லறத்தாருக்கான நியதியாக இந்து மதம் கூறுகிறது. ஒருவேளை உண்பவர் ‘யோகி’ என்றும், இருவேளை உண்பவர் ‘போகி’ (உல்லாசி) என்றும், மூன்று வேளை உண்பவர் ‘ரோகி’ (வியாதியாளர்) என்றும் சொல்கிறது. எனவே, மூன்று வேளை உணவு என்பது பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட பழக்கம்தான்.
ஒவ்வொரு வேளை உணவைச் சாப்பிடும் முன்பும் ஆண்டவனை வணங்கிய பிறகே உண்ண வேண்டும். அந்த உணவை தந்ததற்கு நன்றியும், தான் உண்ணும் உணவு செரித்து நல்ல உணர்வைத் தர வேண்டும் என்றும் வேண்டிக்கொள்ள வேண்டும். ‘இந்த உணவை பெறும் வேளையில் ஏதேனும் உயிர் துன்பப்பட்டு இருந்தால், அதற்கு மன்னிப்பைக் கோரிக்கொள்வதும்’ ஆன்றோர் வழக்கம். விரதம் இருக்கும்போதும், சந்திர, சூரிய ஆதிக்கம் அதிகம் இருக்கும் நாட்களிலும் அசைவம் தவிர்ப்பது ஆன்மிகம் மட்டுமல்ல, அறிவியலும் ஒப்புக்கொள்ளும் ஒரு நல்ல வழிமுறைதான்.
சனியின் ஆதிக்கம் கொண்ட ஒருவர் காரத்தை அதிகம் உண்பதும், குருவின் ஆதிக்கம் அதிகம் இருப்பவர் இனிப்பை விரும்பி உண்பதும் சகஜம் என்கிறது ஜோதிடம். ராகு ஆதிக்கம் கொண்டவர் உணவு விரும்பியாக வறுத்தது, பொறித்தது என பலவாறு உண்பார்கள் எனவும் கூறுகிறது. எனவே, ஒருவரின் உணவு விருப்பம் கூட, கோள்களின் ஆதிக்கத்தால் நடப்பதுதான் என ஜோதிடம் கூறுகிறது. இல்லறத்தில் இருப்பவர்கள் முடிந்தவரை யாராவது ஒருவருக்கு உணவை தானமிட்டுவிட்டு அதன் பிறகே உண்ண வேண்டும். முக்கிய நாட்களில் தெய்வங்களுக்கு படையல் இட்ட பிறகும், அமாவாசை போன்ற நாட்களில் பித்ருக்களுக்கு உணவிட்ட பிறகும், எல்லா நாள்களிலும் மிருகங்களுக்கும் பட்சிகளுக்கும் முடிந்தவரை உணவிட்டு விட்டு பிறகே உண்ண வேண்டும். அதிதி ஒருவரை வைத்துக்கொண்டு ஒருவன் தனியே உணவு உண்ணக்கூடாது.
Readmore: பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கழுத்தறுக்கப்பட்ட சிறுமி.. மருத்துவமனையின் அலட்சியத்தால் பலி..!!