நித்தியானந்தா எங்கு உள்ளார்? கைலாசா எங்குள்ளது? அங்கு எப்படி செல்வது? என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளது.
மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதியாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டார். நான் ஒரு பக்தனாக மதுரை ஆதீனம் மடத்திற்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று நித்தியானந்தா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, நித்தியானந்தா மதுரை ஆதீன மடத்திற்குள் நுழைய தடையில்லை என்றும், அறநிலையத்துறை இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த மனு இன்று நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிரீட்டா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இது 2018-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு.. தற்போது நித்தியானந்தா எங்கு உள்ளார்? கைலாசா எங்குள்ளது? அங்கு எப்படி செல்வது? அங்கு செல்ல பாஸ்போர்ட் விசா உள்ளதா? நித்தியானந்தாவின் சீடரான நீங்கள் அங்கு சென்று வந்துள்ளீர்களா? என்று நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
அதற்கு நித்தியானந்தா தரப்பில் ஆஜரான அவரின் சீடர் அர்ச்சனா, நான் அங்கு சென்று வரவில்லை.. ஆஸ்திரேலியா அருகே USK (United State Of Kailasa) என்ற தனிநாட்டில் நித்தியானந்தா உள்ளார். இந்த நாடு ஐ.நா சபையின் அங்கீகாரம் பெற்றுள்ளது. அதற்கு பாஸ்போர்ட், விசா வழங்கப்பட்டு வருகிறது. எனது நண்பர்கள் சென்று வந்துள்ளனர்.
நித்தியானந்தா சார்பில் புதிய வழக்கறிஞரை நியமிக்க அனுமதி வழங்கிய நீதிபதிகள் வழக்கு விசாரணை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
பாலியல் புகார், ஆபாச வீடியோ என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானவர் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா. அவரை கைது செய்ய போலீசார் முயற்சித்து வந்த நிலையில், இந்தியாவை விட்டு வெளியேறி தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். தென் பசுபிக் கடலில் உள்ள தீவு ஒன்றை வாங்கி, அந்த தீவுக்கு கைலாசா என்று பெயரிட்டு தனி நாட்டை உருவாக்கினார். அங்கிருந்தே ஆன்மீக சொற்பொழிவுகளையும் ஆற்றி வருகிறார். நித்தியானந்தா இறந்துவிட்டதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அதனை மறுத்து அவர் வீடியோ வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடததக்கது.
Read More : ஏடிஜிபி ஜெயராமன் வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..