ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சாலேமார் மாவட்டம் பனியானா பகுதியைச் சேர்ந்தவர் கோமாராம். இவர், இனிப்பு கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி 24ஆம் தேதி வழக்கம் போல கடையை திறந்த இவர், கடையில் இனிப்புகள் அங்குமிங்கும் சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அத்துடன் கடை கல்லாவில் பணம் திருடுபோனதையும் பார்த்துள்ளார். அப்போது, அங்கு ஒரு கடிதம் தென்பட்டுள்ளது. கடையில் கொள்ளை அடித்த திருடன் உரிமையாளருக்கு இரு பக்கத்தில் கடிதம் எழுதி வைத்து சென்றுள்ளான். அந்த கடிதத்தில் ”ஹலோ சார், நான் நல்ல மனசு கொண்டவன். நான் உங்கள் கடைக்கு திருடுவதற்காக நுழையவில்லை. எனது ஆசையை நிறைவேற்ற தான் வந்தேன். நான் சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகிறது. ஒரே பசியாக இருந்ததால், உங்கள் கடைக்கு சாப்பிடத்தான் வந்தேன். பணம் திருட வரவில்லை. நீங்கள் ஏழை என்பதை நான் அறிகிறேன். அதனால் தான் ஆறுதல் கூறுவதற்காக இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
எனது காலில் அடிபட்டுள்ளதால் அதற்கு பணம் தேவைப்படுகிறது. எனவே, உங்கள் கல்லாவில் இருந்த பணத்தையும் நான் எடுத்துக்கொண்டேன். நான் உங்கள் கடையில் அதிகமாக ஒன்றும் சாப்பிடவில்லை. 4 பீஸ் இனிப்புகளை தான் சாப்பிட்டேன். சேவ் கிடைக்கும் என்று தேடி பார்த்தேன். அது இல்லை. கடைசியாக ஒன்று சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் போலீசிடம் புகார் தெரிவிக்க வேண்டாம். ஏன் என்றால் நான் உங்கள் விருந்தாளி” இவ்வாறு அந்த கடிதத்தில் திருடன் எழுதியுள்ளான். இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், கடையின் உரிமையாளர் கோமாராம் காவல்துறையிடம் புகார் அளிக்க விருப்பமில்லை எனக் கூறிவிட்டார். அவர் கடையில் இருந்த ரூ.7,000 பணம் மற்றும் இனிப்புகள் திருடப்பட்டுள்ளன. உரிமையாளர் புகார் அளிக்காவிட்டாலும், அந்த திருடனை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.