ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், அவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததோடு, தற்கொலை என நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலாஜி நகரைச் சேர்ந்த தேவுடு – துர்கா தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ள நிலையில், அண்மைக்காலமாகத் தம்பதிக்கு இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடு இந்த விபரீத முடிவுக்கு வழிவகுத்துள்ளது.
துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த துர்கா, பணிக்குச் செல்லும்போது நாகரீகமாக உடை அணிவதை கணவர் தேவுடு தவறாக சித்தரித்து வந்துள்ளார். “வேலைக்குச் செல்லும்போது எதற்கு இவ்வளவு அலங்காரம்?” என்று தொடங்கி, மனைவியின் ஒழுக்கம் குறித்து தொடர்ந்து சந்தேகப்பட்டு வந்துள்ளார். ஒருகட்டத்தில் சந்தேகம் முற்றிய நிலையில், துர்கா வேலை பார்க்கும் இடத்திற்கே ரகசியமாக சென்று தேவுடு வேவு பார்த்துள்ளார். இது துர்காவிற்குத் தெரியவரவே, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்துள்ளது.
சம்பவத்தன்று ஏற்பட்ட மோதலில் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற தேவுடு, துர்காவின் கழுத்தை நெரித்துக் கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர், இது தற்கொலை போலத் தெரிய வேண்டும் என்பதற்காக துர்காவின் உடலைத் தூக்கில் தொங்கவிட்டு தப்பியோட முயன்றுள்ளார். துர்காவைத் தேடி வந்த அவரது தோழி, கதவைத் தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்து துர்காவின் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளார். அவர்கள் வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது, துர்கா சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், துர்காவின் மரணம் தற்கொலை அல்ல என்பது பிரேதப் பரிசோதனை மூலம் உறுதியானது. தேவுடுவின் செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் வீட்டிலேயே இருந்ததால், அவர் எங்கோ பதுங்கியிருப்பதை போலீசார் உணர்ந்தனர். வீடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடியபோது, சமையலறையில் இருந்த ஃபிரிட்ஜிற்கு பின்னால் பதுங்கியிருந்த தேவுடுவை போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தாமே கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தற்போது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது.



