சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சென்னை அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதால், இந்த வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் ஞானசேகரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், செல்போன் உரையாடல்கள் அனைத்தும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றது. இதற்கிடையே, அரசு தரப்பில் 29 சாட்சிகளும், 100-க்கும் நூற்றுக்கு மேற்பட்ட ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில், ஞானசேகரன் மீதான 11 குற்றங்களும் நிரூபிக்கப்பட்டு குற்றவாளி என தீர்ப்பு வழங்கினார். பின்னர், நேற்று ஞானசேகருக்கான தண்டனையை அறிவித்தார். அதன்படி, ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பளித்தார். 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாத ஆயுள் தண்டணையும், ரூ.90,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
யார் அந்த சார்..? தீர்ப்பின் முழு விவரம்..
ஞானசேகரன், தான் பல்கலைக்கழக ஊழியர் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி மாணவியை ஏமாற்றுவதற்காகவும், மிரட்டுவதற்காகவும் ‘சார்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். இது அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் மற்றும் நேரடி சாட்சிகள் மூலமாக தெரிவதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் ஞானசேகரன் மட்டும் தான் குற்றவாளி என்ற அரசு தரப்பு வாதத்தை நீதிமன்றம் திருப்தியுடன் ஏற்றுக்கொள்கிறது.
கல்வி நிறுவனத்திற்கு பல்வேறு கனவுகளுடன் வந்த மாணவியை ஞானசேகரன் சீரழித்துள்ளார். இதன்மூலம் ஞானசேகரன் ஒட்டு மொத்த சமூகத்தையுமே அவமதித்துள்ளார். இதுபோன்ற அநீதியை ஒருபோதும் ஏற்க முடியாது; அனுமதிக்கவும் முடியாது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எந்தவொரு கருணையும் காட்ட முடியாது என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.