பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது..
ஆனால், என் மூச்சிருக்கும் வரை நான் தான் தலைவர் என்று திட்டவட்டமாக ராமதாஸ் கூறி வருகிறார்.. மேலும் அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.. மேலும் பாமகவின் செயல்தலைவராக தனது மகள் ஸ்ரீகாந்தி செயல்படுவார் என்று ராமதாஸ் சமீபத்தில் அறிவித்திருந்தார்..
இதனிடையே பாமக தலைமை யாருக்கு சொந்தம் என்பது தொடப்ராக ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தது.. இந்த சூழலில் பாமக தலைவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்திருந்தது.. பாமகவின் கட்சி நிர்வாகிகள் அன்புமணியை தலைவராக தேர்வு செய்துள்ளனர் என்பதற்கான ஆவணங்கள், தரவுகள் உள்ளன.. எனவே அன்புமணி தான் பாமக தலைவர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.. தலைவர் பதவியில் முரண்பாடுகள் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்திருந்தது..
ஆனால் அன்புமணி தற்போது தேர்தல் ஆணையத்தையே விலைக்கு வாங்கிவிட்டார் என்று ராமதாஸ் குற்றம்சாட்டி இருந்தார். மேலும் “ பணம் பத்தும் செய்யும் என்பார்கள்.. ஆனால் தேர்தல் ஆணையம் வரை தற்போது பணம் சென்று விட்டது.. இதை எல்லாம் தமிழக மக்கள் நம்பமாட்டார்கள்.. இனி வெல்லப்போவது ராமதாஸ் தான்.. எல்லாவற்றிலும் தோற்கப் போவது அன்புமணி தான்..” என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் பாமக தலைவராக அன்புமணியை ஏற்றதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. அதில் தேர்தல் ஆணையத்தில் அன்புமணி தரப்பில் தவறான ஆவணங்கள் தரப்பட்டதாக கூறி பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்..
தங்கள் தரப்பு கொடுத்த அசல் ஆவணத்தை ஆராயாமல் தேர்தல் ஆணையம் தவறான முடிவெடுத்துள்ளதாகவும் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.. ராமதாஸ் தாக்கல் செய்த இந்த மனு வியாழக்கிழமை அன்று விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது..



