கிரெடிட் கார்டு என்பது ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனத்தினால் அதனுடைய வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் ஒரு பிளாஸ்டிக் அட்டை ஆகும். அந்தக் கிரெடிட் கார்டை பயன்படுத்தி அந்த வாடிக்கையாளர் எந்த ஒரு பொருளோ அல்லது சேவையையோ விலைக்கு வாங்க இயலும். அதன் பின்னர் ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் அந்த வாடிக்கையாளர் தான் வாங்கிய பொருள் அல்லது பெற்ற சேவைக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
பணத்தேவை அதிகமாக இருப்பதால் அதை சமாளிக்க கிரெடிட் கார்டை அதிகமான அளவில் பயன்படுத்துகின்றனர். கிராமங்களை விட நகரங்களில் அதிகரித்து வரும் செலவுகளுக்கு மத்தியில், இளைஞர்களிடையே கிரெடிட் கார்டுகளுக்கான தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிராமங்களில் உள்ள மக்கள் கூட இப்போது அதிகமான அளவில் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். கிரெடிட் கார்டில் வெகுமதிப் புள்ளிகள், EMI போன்ற சில சலுகைகளும் உள்ளன.
இந்தநிலையில், கிரெடிட் கார்டு வைத்திருக்கும் நபர் திடீரென்று இறந்துவிட்டால் அந்த கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை யார் செலுத்துவார்கள் என்ற கேள்வி பரவலாக இருக்கிறது. நெருக்கடியான காலங்களில் கிரெடிட் கார்டுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த குறுகிய கால கடன்களை செலுத்த நிறுவனங்கள் சலுகை காலத்தை வழங்குகின்றன. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த சலுகை காலத்தில் தங்கள் கிரெடிட் கார்டு பில்களை செலுத்துபவர்கள் எந்த வட்டியையும் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் சலுகை காலம் முடிந்ததும் வங்கிகள் சிறிய கடன்களுக்கு அதிக அளவு வட்டியை வசூலிக்கும். இது நமக்கே பெரிய பிரச்சினையாக மாறிவிடும்.
பெரும்பாலான கிரெடிட் கார்டுகள் பாதுகாப்பற்ற கடன்களின் வகையின் கீழ் வருகின்றன. பாதுகாப்பற்ற கடன்கள் என்றால் உங்கள் வருமானம், கடன் மதிப்பெண் மற்றும் திருப்பிச் செலுத்தும் வரலாற்றைச் சரிபார்த்த பிறகு வங்கிகள் உங்களுக்கு கிரெடிட் கார்டை வழங்கும். அதற்கு நீங்கள் எந்த பிணையமும் வழங்கத் தேவையில்லை.
கிரெடிட் கார்டை வைத்திருப்பவர் இறந்துவிட்டால் அவர்களின் கடன் முடிக்கப்படுகிறது. அதாவது, அந்த நபர் மட்டுமே கிரெடிட் கார்டு பில்லை செலுத்துவதற்கு முழுப் பொறுப்பாவார். எனவே அவர்களின் மரணத்திற்குப் பிறகு சுமை அவர்களின் குடும்பத்தினரின் மீது வராது. மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இறந்தவரின் சொத்திலிருந்து சம்பந்தப்பட்ட வங்கி முதலில் அதன் நிலுவைத் தொகையை வசூலிக்க முயற்சிக்கும்.
இறந்தவரின் பெயரில் ஏதேனும் சொத்து, வங்கி இருப்பு அல்லது முதலீடு இருந்தால் சட்டப்படி வங்கி அதிலிருந்து கடன் தொகையை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கும். இறந்தவரின் பெயரில் சொத்து இல்லை என்றாலோ, கடனைத் திருப்பிச் செலுத்த பணம் இல்லை என்றாலோ வங்கிகள் இறுதியில் இந்தக் கடனை ரத்து செய்ய வேண்டியிருக்கும். இதற்கான இழப்பை அந்த வங்கியே ஏற்க வேண்டும்.