Sexual sculptures: சங்க காலத்தின் பின் இந்து சமயக் கோயில்களில் பிற சிற்பங்கள் இடம் பெறுவது போல் பாலியல் சிற்பங்களும் இடம் பெறுகின்றன.இச்சிற்பங்கள் பெரும்பாலும் கோபுரம், விமானம், தூண்களின் சதுரப் பகுதி போன்ற இடங்களில் இடம் பெறுகின்றன.அதே போல, கோயிலில் காம நிலைகளில் கடவுள் சிற்பங்களும் வடிமைக்கப்படுள்ளன. தமிழிலக்கியத்தில் காதல், களவு, காமம் ஆகியவை சிறப்பாக கூறப்பட்டுள்ளன. 1800 ஆம் ஆண்டுக்கு பின்னரே ஆண்களும் பெண்களும் மேற்சட்டை அணியும் வழக்கம் தமிழ்ச் சூழலில் பொதுவாக ஏற்பட்டது.முஸ்லீம்கள், ஐரோப்பியர் வருகைக்கு முன்பு தமிழ் ஆண்களும், பெண்களும் அரையில் மட்டும் ஆடையுடுத்தி, அரைக்குமேல் வெற்றுடம்பாக இருந்தார்கள்.
உடம்பில் சட்டை அணிவதை அநாகரிமாக அக்காலத்தவர் கருதினார்கள். அரசர்களிடம் ஊழியம் செய்தவர்களே சட்டை அணிந்தனர்.தமிழர் வரலாற்றில் பெண்ணுக்கு கண்டிப்பான கற்பு, குடும்பம் போன்ற ஒழுக்க விதிகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. ஆண்களுக்கு அப்படி இருக்கவில்லை. எனினும் பாலியலை இயற்கையான தூண்டுதலாக தமிழர்கள் நோக்கியிருக்கிறார்கள் என்பது எட்டுத் தொகையையும், பத்துப்பாட்டையும் வாசிக்கும்போது புரிகிறது.
சங்க காலத்தில் தமிழ் நாட்டிலே கட்டப்பட்டிருந்த சில கட் டிடங்களைப் பற்றிய குறிப்புக்களும் வர்ணனைகளும் இலக்கிய ஆதாரங்களிலே கிடைக்கின்றன. கி.பி.2ஆம் நூற்றாண்டளவில் எழுதப்பட்ட பட்டினப்பாலை,சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களில் கட் டிடங்களைப் பற்றிய வர்ணனைகள் வருகின்றன. அத்துடன்,அதற்கு முன்னைய அகம், புறம் கூறும் பெரும்பாலன சங்க இலக்கிய செய்யுள்களில் நடுகல் கோயில்களை பற்றிய செய்திகள் வருகின்றன. இவற்றின் உதவி கொண்டு தமிழ் நாட்டின் கட்டிடங்கள் பற்றி சில தகவல்களைப் பெற முடிந்தாலும் கட் டிடங்களின் பாணி பற்றி தெளிவாக வரையறுத்துக் கூறமுடியாதுள்ளது. இவை செங்கல், மரம், ஓடு ஆகியவற்றைப் பயன்படுத்திக் கட்டப்பட்டனவென்று பொதுவாக கூறப்படுகின்றது.
சங்க காலத்திலும். சங்கமருவிய காலத்திலும் கிராமிய மட்டத்திலான ஆலயங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. தெய்வங்களுக்குரியனவாக அவ்வாலயங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையை முற்றுமுழுதான மாறதலுக்குள்ளாக்கியவர்கள் பல்லவராவார்.இவர்கள் கி.பி. 250 முதல் கி.பி. 850 வரை சுமார் அறுநூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் நிலைத்து நின்று ஆட்சி புரிந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இதுவரையில் தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுவந்த கட் டிடக் கலைமரபிற்கு பதிலாக ஆகம கலைமரபை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தனர்.ஆகமங்கள் என்பவை, கோயில் நடைமுறைகளைப் பற்றிக் கூறும் விதிமுறைகளைக் கொண்ட நூல்கள்.
கோயில்கள் எப்படிக் கட்டப்பட வேண்டும், குட முழுக்கு எப்படி நடைபெற வேண்டும், பூசைகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் போன்ற தகவல்கள் ஆகமங்களில் இடம் பெற்றுள்ளன. அதிலும், சிவன் கோயில்களுக்கான ஆகமங்கள் வேறு, வைணவக் கோயில்களுக்கான ஆகமங்கள் வேறு ஆகும் . அந்த ஆகம விதிகளுக்கு அமைவாக கோயில் கட் டிடங்களை ஆக்கினர். அந்த வகையில் கற்பக்கிரகம், அந்தராளம் [அந்தராள மண்டபம்], முன் மண்டபம், மகா மண்டபம், கொடி மண்டபம். சுற்றுப் பிரகாரம், சுற்றுப் பிரகார தெய்வங்கள், விமானம், கோபுரங்கள் உள்ளிட்ட கட் டிட நிலைகளை அமைக்க ஆகம முறைகளைப் பயன்படுத்தினர்.
வட இந்தியாவைப் போன்றே, தமிழகத்திலும் பல்லவ, பாண்டிய, சோழர்களின் ஆட்சிக் காலத்தில் கோயில் வாயிலின் நிலைகளின் மேற்பகுதியில் சிற்பங்கள் அமைக்கும் வழக்கம் பின்பற்றப் பட்டது. இதற்கான கருத்துகளைப் புராணங்களி லிருந்தும், இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றிலிருந்தும் எடுத்துக் கொண்டனர். உதாரணமாக வைணவக் கோயில் கதவுகளில் மேல் தட்டில் விஷ்ணுவின் அவதாரச் சிற்பங்களும், கணபதி சிற்பமும் உள்ளன. அடுத்த தட்டில் இராமாயணச் சிற்பங்கள் தொடர்ச்சியுடைய கதை நிகழ்ச்சி களாகவோ, அல்லது குறுக்கு வெட்டு அமைப்பிலோ செதுக்கப் பட்டிருக்கின்றன. இதற்குக் கீழே மகாபாரதச் சிற்பங்கள் இதே அடிப்படையில் அமைந்துள்ளன. அதற்கும் கீழ்த்தட்டில் பாலியல் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன.
பாலியல் சிற்பங்கள் ஏன் அமைக்கப்படுகின்றன? என்பதற்கு சில காரணங்கள் கூறப்பட்டுள்ளன . கோயிலின் விமானம் மற்றும் கோபுரம் ஆகிய பகுதியில் திருஷ்டிபடாமலிருப்பதற்காக அமைக்கப்படுகின்றன. கோயில்களில் இடம் பெறும் சிற்பங்கள் பெரும்பாலும் புராண, இதிகாசச் சிற்பங்கள் மற்றும் மனித வாழ்வில் நிகழக்கூடிய இயற்கையான நிகழ்வுகளும் என்பதால். மனித வாழ்வில் ஓர் அங்கமாக விளங்கும் பாலியலைத் தவறாகவோ புனிதமற்றதென்றோ கருத வேண்டிய தில்லை.எனவே இத்தகு பாலியல் சிற்பங்கள் இடம் பெறுகின்றன.
ஆரியர்கள் தந்த ஆகமங்களில் இத்தகு பாலியல் சிற்பங்களைக் கோபுரம் மற்றும் விமானங்களில் அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதால் இவை கோயில்களில் அமைக்கப் பட்டு இருக்கின்றன. மனிதன் கோயிலுக்குள் செல்லும் பொழுது மனத்தைக் கண்டபடி ஓடவிடாது அடக்க வேண்டும் என்பதற்காகவும் இத்தகு பாலியல் சிற்பங்கள் கோயில்களில் இடம் பெறுகின்றன. மனித வாழ்வில் பாலியலும் ஒரு பகுதியாக இருப்பதால் இனப் பெருக்கத்தின் அவசியம் காரணமாக அமைக்கப்பட்டிருக்கலாம்.
இந்து சமயம் சார்ந்த சில புராணங்கள் இந்தப் பாலியல் தொடர்புடையதாக உள்ளன.மேலும் “யோனி வணக்கம்” (Yoni cult) பழங்காலம் முதல் இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வழிபாடு மக்கள்தொகை பெருக்கம் அல்லது மனிதன் பிறந்து வந்த வழியை நினைத்து நன்றி கூறுவதற்காக என்று தொடங்கி யிருக்கலாம்.
கோயில்களில் இடம் பெறும் பாலியல் தொடர்பான சிற்பங்கள் அழகுணர்ச்சியைத் தூண்டும்படியாக அமையாமல் அருவருக்கத்தக்க வகையிலேயும் அமைந்துள்ளன. இவற்றை இடம் பெறச் செய்தது அரசன் என்பதை விட சிற்பியின் படைப்பாற்றலுக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரம் ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது பாலியல் சிற்பங்களை அமைக்கும் சிற்பியின் மிஞ்சிய பாலியல் உணர்வுகளுக்கான வடிகாலாக இருக்கலாம். குழந்தை வரம் வேண்டிக் கோயிலுக்குச் செல்லும் தம்பதியினருக்கு இத்தகு சிற்பங்கள் தாம்பத்யத்திற்கு ஒரு தூண்டுகோலாகவும் அமையுமென்பதால் இத்தகு சிற்பங்கள் இடம் பெற்றிருக்கலாம்.