வேலை வாய்ப்பை ஏற்படுத்தவும், வறுமையை ஒழிக்கவும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு இயற்றியது.. இந்த சட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது..
ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால், அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை இந்த திட்டம் வழங்குகிறது.. இந்த திட்டத்தின் கீழ் 25.25 கோடி பேர் பதிவு செய்துள்ளனர்.. இந்த நிலையில் இந்த திட்டத்தின் பெயரை ‘ விக்சித் பாரத் ஜி ராம் ஜி’ என மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.. மேலும் மத்திய அரசு நிதியை 90%லிருந்து 60 ஆக குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.. இதுதொடர்பாக புதிய மசோதாவை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகம் செய்ய உள்ளது..
மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்த ஸ்டாலின் உடனடியாக மத்திய அரசு தனது முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்..
இந்த நிலையில் 100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம் குறித்து அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்று முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு, மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா? கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றிலேயே அடிக்கும் 100 நாள் வேலை திட்டம் பெயர் குறித்து எதிர்க்கட்சி அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? 3 வேளாண் சட்டங்கள், சிஏஎ போல இதிலும் அமித்ஷாவுக்கு ஆமாம் சாமி போட்டு ஆதரவு தரப்போகிறாரா திருவாளர் பழனிசாமி?
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் காந்தியடிகளின் பெயரை அகற்றிவிட்டு, சொன்னால் வாய் சுளுக்கிக் கொள்ளும்படி இந்தியில் பெயரிட்டிருக்கிறார்கள். இந்தித் திணிப்பை எதிர்த்து வென்ற பேரறிஞர் அண்ணாவின் பெயரைக் கட்சியின் பெயரில் வைத்துக்கொண்டு, இதை எதிர்க்கக் கூடவா தயக்கம்? திட்டத்துக்கான நிபந்தனைகள் எல்லாம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்! நிதிக்கு மட்டும் மாநில அரசு பங்களிக்க வேண்டும் என்பதை அதிமுக எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்கிறதா? உங்கள் தலைவி அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டிருப்பாரா?
வறுமையை ஒழித்த சாதனைக்குத் தண்டனையாக தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத்திட்டமே நின்றுபோகும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம். இதற்கு, எப்படி முட்டு கொடுக்கப் போகிறார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்? இவ்வளவு குனிந்து கும்பிடும் போடும் உங்களது கட்சிக்கு, “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற பெயர் எதற்கு? நான் கேட்கவில்லை; தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.



