தமிழ்நாடு காங், கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை பனையூரில் நடக்கும் பாமக ஊடகப்பிரிவு ஆலோசனைக்கூட்டத்தில் அன்புமணி பேசினார். அப்போது “ தமிழ்நாடு காங், கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்? வன்னி அரசு, ரவிக்குமார், சிந்தனை செல்வனுக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்? செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் திடீரென ராமதாஸை சென்று சந்திப்பது ஏன்? ராமதாஸை என்றைக்காவது திருமாவளவன் புகழ்ந்து பேசி உள்ளாரா? தற்போது ஏன் புகழ்ந்து பேசுகிறார்.?
ராமதாஸை புகழ்ந்து பேசுவது, அவரை திடீரென சந்திப்பதும் எல்லாமே திமுகவின் சூழ்ச்சி.. ஐயா ராமதாஸ் வயது முதிர்வின் காரணமாக, தற்போது குழந்தை போல் மாறிவிட்டார். கடந்த 5 ஆண்டுகளாக ராமதாஸ் ஐயா, ஐயாவாக இல்லை.. ராமதாஸ் ஐயாவாக எதை செய்ய சொல்லி இருந்தாலும், கண்களை மூடிக்கொண்டு செய்திருப்பேன்.. ஐயாவிற்கு பிறகு தான் நான் தலைவராக வேண்டுமெனெ 12 ஆண்டுகளுக்கு முன்பு முடிவெடுத்திருந்தேன்.. ஐயா ராமதாஸை சிலர் சுயநலத்திற்காக பயன்படுத்தியதால், தலைவராக ஒப்புக் கொண்டேன்.. ” என்று தெரிவித்தார்..
முன்னதாக நேற்று தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து பேசினார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த சந்திப்பு நடைபெறுவதால் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அவர் சந்தித்தாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ராமதாஸ் உடன் கூட்டணி குறித்து பேசவில்லை என்றும், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் செல்வப்பெருந்தகை கூறியிருந்தார்.