கள்ளத்தொடர்பு வைத்திருந்த கணவனை, மகன் உதவியுடன் மனைவி கொலை செய்து உடலை 22 துண்டுகளாக வெட்டி வீசியுள்ள சம்பவம் டெல்லியை நடுங்க வைத்துள்ளது.
டெல்லி கிழக்கில் உள்ள பாண்டவ நகர் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சன்தாஸ். இவருடைய மனைவி பூனம். இந்தத் தம்பதியின் மகன் தீபக். இந்நிலையில், அஞ்சன்தாசுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்தத் தொடர்பை கைவிடும்படி மனைவி பூனம் பலமுறை சொல்லியும் அவர் கேட்கவில்லை. இதனால் பூனம், கணவரை கொல்ல முடிவு செய்தார். இதையடுத்து கடந்த ஜூன் மாதம், மகன் உதவியுடன் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்தார். பின்னர், கணவரின் உடலை 22 பாகங்களாக வெட்டி அதை பிரிட்ஜில் வைத்துள்ளார். இதையடுத்து, உடல் துண்டுகளை டெல்லி கிழக்கு பகுதியில் சுற்றுப்புறத்தில் நாள்தோறும் சென்று வீசினார்.

நள்ளிரவில், மகன் தீபக் கையில் பையுடன் செல்வதும் அவருக்கு பின்னால் அவரது தாயார் பூனம் செல்வதும் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. கடந்த ஜூன் மாதம் பாண்டவ் நகரில் போலீசார் அஞ்சன்தாஸின் உடல் உறுப்புகளை கண்டு பிடித்தனர். சிதைந்த நிலையில் இருந்ததால் அடையாளம் காண முடியவில்லை. தற்போது அது தாஸின் உடல் பாகங்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தாய் பூனம், மகன் தீபக் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.