பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள பிம்பலூர் கிராமத்தில், கள்ளக்காதல் விவகாரத்தால் பச்சிளம் ஆண் குழந்தை முட்புதரில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிம்பலூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் – கோவிந்தம்மாள் தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
மணிகண்டன் கடந்த 16 மாதங்களாக மாலத்தீவில் வேலை பார்த்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்புதான் ஊருக்கு திரும்பி உள்ளார். அப்போது தனது மனைவியின் வயிறு பெரிதாக இருப்பதை கண்டு அவர் கேட்டுள்ளார். அதற்கு கோவிந்தம்மாள், வீட்டில் சும்மா இருந்ததால் தொப்பை போட்டு விட்டதாக கூறி கணவரை நம்ப வைத்துள்ளார். ஆனால், உண்மையில் அவர் அப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
கடந்த 7-ஆம் தேதி இரவு குடும்பத்தினருக்கு உணவு பரிமாறிய கோவிந்தம்மாள், வயிற்று வலி எடுப்பதாக கூறிவிட்டு வீட்டுக்கு வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் மனைவி வராததால் தேடி சென்ற மணிகண்டன், தைலத்தோப்பு பகுதியில் ரத்த வெள்ளத்தில் மனைவி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் பிரசவம் முடிந்து மயக்கத்தில் இருப்பதை உறுதி செய்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அங்குள்ள முட்புதரில் ஆண் குழந்தை ஒன்று சடலமாக கிடந்தது தெரியவந்தது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கணவர் வெளிநாட்டில் இருந்தபோது கோவிந்தம்மாளுக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கர்ப்பமானது அம்பலமானது. ஊருக்கு திரும்பிய கணவரிடம் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில், நள்ளிரவில் தனியாக குழந்தையை பெற்றெடுத்து முட்புதரில் வீசியது தெரியவந்தது. இது தொடர்பாக வீகாளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்த நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



