அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர் இலக்குவன் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் ஜூன் 1ஆம் தேதியான நாளை முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில், பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க மே 23ஆம் தேதி அமைச்சர் மூர்த்தி, மணிமாறன், தளபதி ஆகியோர் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தினர். அப்போது, மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தை மேயர் இந்திராணி நடத்தினார். ஆனால், இந்த கூட்டத்தை திமுக கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.
மேயரின் இந்த நடவடிக்கைக்கு பின்னணியில் அவரது கணவர் பொன் வசந்த் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதுமட்டுமின்றி, கடைகளுக்கு அனுமதி பெற்றுக் கொடுப்பது, வீடு கட்ட அனுமதி வழங்கி தருவது, அரசுப் பணிகளில் ஒப்பந்தம் போன்ற பல விஷயங்களில் பொன் வசந்த் மேயர் போல செயல்பட்டு வருவதாக திமுக தலைமைக்கு புகார்கள் பறந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், பொன்வசந்த், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக அறிவித்தார். பொன் வசந்த், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தீவிர ஆதரவாளர் ஆவார்.
இந்நிலையில் தான், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மற்றொரு ஆதரவாளர் இலக்குவன் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து வந்த இலக்குவன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, அமைச்சர் பிடிஆரை குறித்து அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு வருவது, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சரின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.