பெட்ரோல் மற்றும் டீசல் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.. அதாவது, பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருள் பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்படுமா என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்..
பெட்ரோல், டீசல் விரைவில் ஜிஎஸ்டிக்குள் வருமா ?
பிரபல ஆங்கில செய்தி ஊடகத்திடம் பேசிய நிர்மலா சீதாராமனிடம், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மதுபானங்கள் எதிர்காலத்தில் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவரப்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.. அதற்கு பதிலளித்த அவர், “தற்போது அரசிடம் அத்தகைய திட்டம் எதுவும் இல்லை” என்று பதிலளித்தார். அதாவது தற்போது இந்த பெட்ரோலிய பொருட்களில் எந்த மாற்றங்களையும் செய்யும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ” பெட்ரோலிய பொருட்களில் காலப்போக்கில் சில மாற்றங்கள் இருக்கலாம், ஆனால் உடனடியாக எந்த மாற்றமும் ஏற்படாது.” என்று கூறி தனது கருத்துக்களை மேலும் தெளிவுபடுத்தினார். அதாவது எரிபொருள் மற்றும் மதுபானங்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவருவது உடனடி முடிவு அல்ல என்பதும், மேலும் அதற்கு அதிக காலம் எடுக்கும் என்பதும் உறுதியாகி உள்ளது.
பெட்ரொல், டீசலுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு ஏன்?
பெட்ரோல் பொருட்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவருவது மாநிலங்கள் தங்கள் சொந்த வருவாயை இழக்கச் செய்யும். இது மாநிலத்தின் நிதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதனால் தான் எரிபொருள் மற்றும் மதுபானங்கள் மீதான வரிகள் இன்னும் மத்திய மற்றும் மாநிலங்களால் தனித்தனியாக விதிக்கப்படுகின்றன. இருப்பினும், இந்த இரட்டை வரிவிதிப்பு முறையால், நுகர்வோர் அதிக சில்லறை விலைகளை செலுத்த வேண்டியுள்ளது. மறுபுறம், ஜிஎஸ்டி வரி முறை பிற பொருட்கள் மற்றும் சேவைகளின் விஷயத்தில் நிறைய எளிமைப்படுத்தல்களைக் கொண்டு வந்துள்ளது.
ஜூலை 2017 இல் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டபோது, பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானம் போன்ற பொருட்களை மத்திய அரசு வரி விதிப்பில் இருந்து விலக்கி வைத்தது. இதற்கு முக்கிய காரணம், இந்த பொருட்களின் மீதான வரிகள் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு மிக முக்கியமான வருவாய் ஆதாரமாகும். கலால் வரி மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) வடிவில் வரும் இந்த வருவாய், மாநிலங்களின் நிதி சுயாட்சியைப் பேணுவதற்கான முக்கிய ஆதாரமாகும்.
56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் : ஜிஎஸ்டி 2.0
கடந்த 3-ம் தேதி, நிர்மலா சீதாராமன் தலைமையிலான 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.. இந்தக் கூட்டத்தில், ஷாம்பு மற்றும் ஹேர் ஆயில் போன்ற அன்றாடத் தேவைகள் முதல் ஆட்டோமொபைல்கள் மற்றும் தொலைக்காட்சிகள் வரை பல பொருட்களுக்கு குறிப்பிடத்தக்க வரி குறைப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது சாதாரண நுகர்வோர் மற்றும் வணிக சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இதுவரை நடைமுறையில் உள்ள 4 முக்கிய வரி அடுக்குகளுக்குப் பதிலாக, 5%, 18% மற்றும் 40% என்ற 3 வரி அடுக்குகளுடன் மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி அமைப்பு இருக்கும் என்று அவர் கூறினார். ஆடம்பரப் பொருட்கள் மற்றும் ‘பாவப் பொருட்களுக்கு’ 40% வரி அடுக்கு குறிப்பாக வைக்கப்பட்டுள்ளது.
எனவே, ஜிஎஸ்டி அமைப்பு எளிமையாகி வந்தாலும், பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானம் போன்ற பொருட்கள் விரைவில் அதன் வரம்பிற்குள் வராது என்பது தெளிவாகிறது. இது மத்திய மற்றும் மாநிலங்களின் வருவாய் தொடர்பான ஒரு முக்கியமான பிரச்சனை என்பதால், இந்த முடிவு சில ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.