உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், சர்வதேச கடல் வணிகத்தின் முதுகெலும்பாக கருதப்படும் ‘ஹார்முஸ் ஜலசந்தியை’ (Strait of Hormuz) மூடுவதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஈரான் எடுத்துள்ள இந்த முடிவு உலக நாடுகளின் பொருளாதாரத்தையே முடக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள இந்த நீர்வழி பாதை, வெறும் கடல் பகுதி மட்டுமல்ல; இது உலக நாடுகளின் எரிபொருள் தாகத்தை தீர்க்கும் உயிர்நாடியாகும். உலகளவில் சந்தைக்கு வரும் மொத்த கச்சா எண்ணெயில் சுமார் 20% முதல் 30% வரையிலான விநியோகம் இந்தப் பாதை வழியாகத்தான் நடைபெறுகிறது. சவூதி அரேபியா, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் தங்கள் எண்ணெய் ஏற்றுமதிக்கு இந்தப் பாதையையே முழுமையாக நம்பியுள்ளன.
ஈரானின் இந்த அறிவிப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதன் நேரடி விளைவாக, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ராக்கெட் வேகத்தில் உயர வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏற்கனவே போர்ச் சூழலால் தத்தளித்து வரும் உலகப் பொருளாதாரத்திற்கு, ஈரானின் இந்த எண்ணெய் அஸ்திரம் மிகப்பெரிய சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



