தமிழக பத்திரப்பதிவு துறையில் பொதுமக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், ஒரு முக்கிய நிர்வாக மாற்றத்திற்கான ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போதைய சூழலில், தமிழகத்தில் உள்ள 580-க்கும் மேற்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில், குறிப்பிட்ட 100 அலுவலகங்களில் மட்டுமே வார இறுதி நாளான சனிக்கிழமைகளில் ஆவணப் பதிவு மேற்கொள்ளும் வசதி நடைமுறையில் உள்ளது. அலுவலக வேலைக்குச் செல்வோர் மற்றும் அவசரத் தேவைக்காக வார நாட்களில் வர முடியாதவர்களுக்கு இத்திட்டம் வரப்பிரசாதமாக அமைந்தாலும், இதற்காக வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம் விவாத பொருளாக மாறியுள்ளது.
தற்போது சனிக்கிழமைகளில் வழங்கப்படும் இந்தச் சிறப்புச் சேவையை பயன்படுத்தும் பொதுமக்கள், வழக்கமான பதிவுக்கட்டணத்துடன் கூடுதலாக 1,000 ரூபாய் சிறப்புக் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. பெரிய அளவிலான சொத்து பரிமாற்றங்களுக்கு இது ஒரு சுமையாக தெரியாவிட்டாலும், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் சிறு நிலங்களை வாங்குவோர் மத்தியில் இக்கட்டணம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
இந்தச் சூழலில், சனிக்கிழமைகளில் செயல்படும் இந்தச் சேவையைத் தமிழகத்தில் உள்ள அனைத்து 582 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, அவ்வாறு விரிவுபடுத்தப்படும் போது, பொதுமக்களின் சுமையை குறைக்கும் வகையில் தற்போது நடைமுறையில் உள்ள 1,000 ரூபாய் சிறப்புக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், சனிக்கிழமைகளும் சாதாரண வேலைநாட்களை போலவே மாற்றப்பட்டு, எவ்வித கூடுதல் செலவுமின்றி பொதுமக்கள் தங்களது பத்திரப்பதிவுகளை மேற்கொள்ளும் சூழல் உருவாகும்.



