தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்குமா என்ற கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். பாஜகவின் 11 ஆண்டு சாதனைகளை அவர் பட்டியலிட்டார். மேலும் “ நாடு முழுவதும் 75 மருத்துவக் கல்லூரிகளை கொடுத்திருக்கிறோம். திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 50-ஐ கூட நிறைவேற்றவில்லை. திமுக தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த பெட்ரோல், டீசல் விலை குறைப்பு செய்யப்படவில்லை. பெட்ரோ விலையேற்றத்தில் மத்திய அரசின் பங்கு ஏதும் இல்லை. தமிழ்நாடு கொடுத்த ஒவ்வொரு பணத்துக்கும் மத்திய அரசு திரும்ப கொடுத்துள்ளது. கோவையில் கல்லூரி மாணவர்களிடையே போதை பொருள் பழக்கம் அதிகரித்திருக்கிறது.
கட்டாய கல்வி சட்டத்தில் பணத்தை கொடுக்க நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. மத்திய அரசிடம் கட்டாய கல்விக்கான நிதி கேட்டு மாநில அரசு கடிதம் அனுப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதே எனது விருப்பம். பாஜக ஆட்சி மீது யாரும் ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைக்கவில்லை. 1.45 கோடி ரூபாய் அமலாக்கத்துறை மூலம் மீட்டெடுத்து கொண்டிருக்கிறோம். ” என்று தெரிவித்தார்.
இதை தொடர்ந்து பாஜக – அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்குமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை “ கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து தற்போது பேச விரும்பவில்லை.” என்று கூறினார்.
முன்னதாக சமீபத்தில் மதுரை வந்திருந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சி துடைத்தெறியப்படும் என்று கூறியிருந்தார். மேலும் தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி ஆட்சி அமையும் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் அதிமுக தலைமையில் தான் ஆட்சி அமையும் என்று அக்கட்சியினர் கூறி வருகின்றனர். இந்த சூழலில் கூட்டணி ஆட்சி குறித்து அண்ணாமலை பதில் சொல்ல மறுத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.