UPI முறையை இப்போது சுமார் 46 கோடி மக்களும் 6.5 கோடி வணிகர்களும் பயன்படுத்துகின்றனர். மிகச்சிறிய பரிவர்த்தனைகளுக்கு கூட டிஜிட்டல் பணம் செலுத்தப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நம்மில் பலரும் இப்போது கூகுள் பே போன்ற யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தி வருகிறோம். இத்தனை காலம் இந்த செயலிகளில் அனைத்து சேவைகளையும் எந்தவொரு கூடுதல் கட்டணமும் இல்லாமல் பயன்படுத்தலாம் என்ற நிலை இருந்த சூழலில், அது இப்போது மெல்ல மாற தொடங்கியுள்ளது. கூகுள் பே நிறுவனம் இப்போது பிராசசிங் கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த காலத்தில் நீங்கள் பர்ஸ் இல்லாமல் கூட வெளியே போகலாம். ஆனால், செல்போன் இல்லாமல் வெளியே செல்ல முடியாது. அந்தளவுக்கு உங்களுக்குத் தேவையான A டு Z வரை எல்லாமே செல்போனில் இருக்கிறது. அதில் முக்கியமானது யுபிஐ.. யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் எனப்படும் இந்த யுபிஐ வருவதற்கு முன்பு வரை எந்தவொரு பொருளை வாங்குவதற்கும் கேஷ் தான் தர வேண்டும். கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் இருந்தாலும் கூட அதன் பயன்பாடு ரொம்பவே குறைவாகவே இருக்கும்.
சின்ன சின்ன கடைகளில் கேஷ் தான் கிங். ஆனால், யுபிஐ வருகைக்குப் பிறகு நிலைமை மொத்தமாக மாறியது. யுபிஐ பயன்பாட்டிற்குக் கட்டணம் இல்லை என்பதால் சின்ன சின்ன கடைகளும் கூட யுபிஐ மூலம் பேமெண்டுகளை வாங்கத் தொடங்கினர். இதன் காரணமாகவே யுபிஐ பயன்பாடு கொஞ்சக் காலத்தில் மின்னல் வேகத்தில் அதிகரித்தன. யுபிஐ நிறுவனங்களும் மெல்ல தங்கள் சேவைகளை மொபைல் ரீசார்ஜ், இதர பில் கட்டணங்கள் என விரிவுபடுத்தின.
இதுநாள் வரை ஜிபே செயலியில் குறைந்த மின்சார கட்டணம் மற்றும் கேஸ் புக்கிங் செய்ய எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையே இப்போது கூகுள் நிறுவனம் இதற்குக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால், அதில் ஒரு சின்ன விஷயத்தை நாம் நோட் செய்ய வேண்டும். அதாவது நீங்கள் யுபிஐ மூலம் இதற்குக் கட்டணம் செலுத்தினால் இன்னும் இலவசம் தான். அதேநேரம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும் போது மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக, சமூக ஊடகங்களிலும் சில அறிக்கைகளிலும், UPI பரிவர்த்தனைகளுக்கு MDR (வணிகர் தள்ளுபடி விகிதம்) கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டது. இதுதொடர்பான பல்வேறு கருத்துகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதனால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்தநிலையில், இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது. நிதி அமைச்சகத்தின் X தளத்தில், ஆன்லைன் கட்டணங்களை ஊக்குவிக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது, ஆனால் அனைத்து வகையான வதந்திகளும் நிறுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும், நிதி அமைச்சகம் தனது பதிவில், இதுபோன்ற தேவையற்ற பீதியை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகக் கூறியுள்ளது.
இந்த செய்திகள் அனைத்தையும் பொய்யானவை, ஆதாரமற்றவை மற்றும் தவறாக வழிநடத்தும் செய்திகள் எனக் கூறி விளக்கம் அளித்துள்ள மத்திய நிதியமைச்சகம், அதன்படி ‘UPI பரிவர்த்தனைகளுக்கு MDR விதிப்பது பற்றிய பேச்சுக்கள் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை மற்றும் தவறாக வழிநடத்தும். இதுபோன்ற வதந்திகள் மற்றும் பரபரப்பான கூற்றுக்கள் மக்களிடையே தேவையற்ற பயம், சந்தேகம் மற்றும் குழப்பத்தை உருவாக்குகின்றன எனக் கூறியுள்ளது.
அதனால் மக்கள் வதந்திகளுக்கு கவனம் செலுத்த வேண்டாம் என்றும், அரசாங்கம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் வழங்கும் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் அரசாங்கம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. UPI முற்றிலும் இலவசமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும், மேலும் அதை வலுப்படுத்த அரசாங்கம் தொடர்ந்து கடுமையாக வேலை செய்து வருவதாகவும் கூறியுள்ளது.
மேலும், ஜூன் மாதத்தில், விசா பரிவர்த்தனைகளை விட UPI மூலம் அதிக பரிவர்த்தனைகள் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 2025 ஆம் ஆண்டில், ஜூன் 1 ஆம் தேதி, UPI மூலம் பரிவர்த்தனை 64.4 கோடியாக இருந்தது, மறுநாள் அது 65 கோடியைத் தாண்டியது. இருப்பினும், ஒரு வருடம் முன்பு, அதாவது 2025 நிதியாண்டில், 64 கோடி UPI பரிவர்த்தனைகள் செய்யப்பட்டன.
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 11 ஆண்டுகால ஆட்சி நிறைவடைந்ததையொட்டி வெளியிடப்பட்ட ஒரு சிறு புத்தகத்தில், இந்தியாவின் டிஜிட்டல் கட்டண முறை உலகளவில் பல்வேறு நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ‘இந்தியாவில் டிஜிட்டல் கட்டணப் புரட்சி முழு உலகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மார்ச் 2025 இல், ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தில் (UPI) சுமார் ரூ.24.77 லட்சம் கோடி மதிப்புள்ள 1,830.151 கோடி UPI பரிவர்த்தனைகள் செய்யப்பட்டன.
இதில் சுமார் 50 சதவீதம் சிறிய அல்லது மிகச் சிறிய கொடுப்பனவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. நேரடி பலன் பரிமாற்றம் (DBT) குறித்து, மோடி அரசாங்கம் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும் நிர்வாகத்தில் ஊழலைத் தடுப்பதற்கும் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கருவிகளை திறம்பட பயன்படுத்தியுள்ளது என்று அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.