தமிழக பாஜக-வின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குறித்து மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை (MNS) தலைவர் ராஜ் தாக்கரே வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்திற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “அண்ணாமலை மும்பையில் கால் வைத்தால் அவரது கால்களை வெட்டுவேன்” என ராஜ் தாக்கரே பேசியிருப்பது அநாகரிகமான அரசியல் மட்டுமின்றி, ஜனநாயக விழுமியங்களுக்கே எதிரானது என சீமான் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.
மகாராஷ்டிர மண்ணின் மைந்தர்களுக்கான உரிமைகளுக்காகப் போராடும் இயக்கங்களின் உணர்வுகளை தாம் மதிப்பதாக குறிப்பிட்ட சீமான், அதற்காக ஒரு அரசியல் தலைவரை நோக்கி வன்முறை மிரட்டல் விடுப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார். கருத்தை கருத்தால் மட்டுமே எதிர்கொள்ள வேண்டுமே தவிர, இத்தகைய காட்டுமிராண்டித்தனமான பேச்சுக்களுக்கு அரசியலில் இடமில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அண்ணாமலையின் அரசியல் கொள்கைகள் மற்றும் பாஜக-வின் நிலைப்பாடுகளுடன் தமக்கு எத்தனை ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும், அவர் முதலில் இந்த தமிழ் மண்ணின் மகன் என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது என்று சீமான் குறிப்பிட்டுள்ளார். ராஜ் தாக்கரேவின் இந்த வன்முறை பேச்சு அண்ணாமலை என்ற தனிமனிதரைச் சார்ந்தது அல்ல, மாறாக அது ஒட்டுமொத்த தமிழ் இனத்தையுமே இழிவுபடுத்தும் செயல் என கூறியுள்ளார்.
கொள்கையளவில் நாங்கள் வேறாக இருக்கலாம், ஆனால் ஒரு தமிழனுக்கு வெளிமாநிலத்தில் ஆபத்து என்றால் அண்ணாமலைக்குத் துணையாக முதல் ஆளாக நான் நிற்பேன் என்று சீமான் அதிரடியாக தெரிவித்துள்ளார். தமிழர்களை அச்சுறுத்தும் இத்தகைய போக்குகளை வடமாநில தலைவர்கள் கைவிட வேண்டும் என்றும், இல்லையெனில் அதற்கான எதிர்விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும் சீமான் தனது அறிக்கையின் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



