அரசுத்துறை சேவை, திட்டங்களை வீடுகளுக்கே சென்று மக்களுக்கு வழங்கும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்ற திட்டத்தை கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு தொடங்கியது.. இந்த திட்டம் மூலம் ஊரகப் பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகளை பெறலாம்.. நகர்ப்புற பகுதிகளில் 13 துறைகளின் 43 சேவைகள் இந்தத் திட்டத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.. நகர்ப்புறங்களில் 3,768 முகாம்கள், ஊரகப்பகுதிகளில் 6,232 முகாம்கள் என 10,000 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. வாரத்தில் 4 நாட்கள், செவ்வாய் முதல் வெள்ளி வரை இந்த முகாம்கள் நடைபெற்று வருகிறது.
இதனிடையே சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் ஆக. 29-ம் தேதி காலை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள் மிதந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது..
இந்த நிலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அருகே உள்ள தாமலேரி முத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, திமுக அரசின் உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்காக இன்று விடுமுறை அளித்திருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாக, எந்தத் துறை நிர்வாகத்தையும் கவனிக்காமல், வெற்று விளம்பரங்களிலேயே நாட்களைக் கடத்தி விட்டு, தற்போது, ஆட்சி முடியும் தருவாயில், முகாம் நடத்துகிறோம், குறை தீர்க்கிறோம் என்று, அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் அனைத்தையும் செயலிழக்கச் செய்து கொண்டிருக்கிறார்கள். நான்கு ஆண்டுகளாக எந்தச் செயல்பாடும் இல்லாமல் தமிழக அரசு இயந்திரம் முடங்கிக் கிடந்தது என்பதற்கு, இப்போது அவசர அவசரமாக ஆங்காங்கே நடக்கும் கண்துடைப்பு முகாம்களே சாட்சி. அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்தலாம் என்ற அகம்பாவம் எங்கிருந்து வருகிறது திமுக அரசுக்கு?
உங்கள் கையாலாகாத்தனத்துக்கு, அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களைப் பலிகடா ஆக்குவதா? ஏற்கனவே திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் அரசுப் பள்ளிக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்தியதை, நாங்கள் கண்டித்த உடன், இனி இப்படி நடைபெறாது என்று உறுதியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், இவற்றை எதையும் கண்டுகொள்ளாமல், மாதம்தோறும் வெளிநாட்டுச் சுற்றுலாவில் பிசியாக இருக்கிறார். ஏற்கனவே முகாம்களில் பெற்ற மனுக்களை, வைகையாற்றில் மிதக்க விட்டுவிட்டு, எதற்கு இந்த வெட்டி விளம்பரம் முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்களே?” என்று குறிப்பிட்டுள்ளார்..
Read More : தலைமறைவாக இருந்த புஸ்ஸி ஆனந்த் விஜய் உடன் திடீர் சந்திப்பு.. கரூர் செல்ல குழு அமைப்பு?



