சைவ உணவு முறையை ஊக்குவிப்பதற்காக ஒரு பெண், நாயின் பால் குடிப்பதைக் காட்டும் பீட்டா இந்தியாவின் சமீபத்திய விளம்பரம் ஆன்லைனில் கடும் விமர்சனங்களைத் தூண்டியுள்ளது.
உலக பால் தினத்தன்று, சைவ உணவு முறையை ஊக்குவிப்பதற்காக PETA இந்தியா (People for Ethical Treatment of Animals), ஒரு பிரச்சாரத்தை தொடங்கியது. துரதிர்ஷ்டவசமாக, இந்த விளம்பர பிரச்சாரம் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த விளம்பர போஸ்டரில், ஒரு பெண் நாயின் பால் குடிப்பது போன்ற வினோதமான படம் இடம்பெற்றிருந்தது. மேலும், அதில், நாய்களின் பால் குடிக்காவிட்டால், வேறு எந்த இனத்தின் பாலையும் ஏன் குடிக்க வேண்டும்? தயவுசெய்து, சைவ உணவை முயற்சிக்கவும்” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.
இன்ஸ்டாகிராமில் முதலில் பதிவேற்றப்பட்ட இந்த விளம்பரத்தை பற்றி பீட்டா கூறியதாவது, அகமதாபாத், பெங்களூரு, போபால், சென்னை, மும்பை மற்றும் நொய்டா ஆகிய பல முக்கிய நகரங்களில் விளம்பரப் பலகைகளாக வைக்கப்பட்டதாகவும், மக்கள் அதிகமாக கவனிக்கும் இடங்கள் என்பதால் இந்த நகரங்களில் வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தது. மேலும் இது சைவ உணவை ஊக்குவிக்கவே செய்யப்பட்டதாக தெரிவித்தது.
மேலும் அந்த பதிவில், “பால்நிறுவனம் என்பது கொடூரத்திற்கே அடிப்படையாக உள்ளது.கட்டாயமாக கருவூட்டல் முதல் கன்றுகளை அவற்றின் தாய்மார்களிடமிருந்து பிரிப்பது வரை. பசுக்கள் பால் கறக்கும் இயந்திரங்கள் அல்ல; அவற்றின் பால் மனிதர்களுக்கு அல்ல, கன்றுகளுக்கானது. பாலை விட்டுவிடுங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதன் படக்காட்சிகள் நெட்டிசன்களிடையே கடும் விமர்சனத்திற்குள்ளானது. சிலர் இதை “முட்டாள்தனமான உள்ளடக்கம்” என்றும் மற்றவர்கள் இதை ஒரு அருவருப்பான விளம்பரம் என்றும் கூறினர்.