மதுரையைச் சேர்ந்த 26 வயதான ஷேக் என்பவர், சென்னை முகப்பேறு பகுதியில் தங்கி பிளம்பர் வேலை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு மதுபோதையில் இருந்த இவர், அங்கு சாலையோரம் தங்கி இருந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அந்தப் பெண் அதற்குச் சம்மதிக்காமல் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ஷேக், தற்காப்பிற்காக போராடிய அந்தப் பெண்ணை நிலைகுலையச் செய்யும் அளவுக்குச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் திரண்டு வரவும், ஷேக் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜே.ஜே. நகர் காவல் துறையினர், இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த அந்தப் பெண்ணை மீட்டு உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அந்தப் பெண் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், தலைமறைவாக இருந்த ஷேக்கை தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு கைது செய்தனர். உயிரிழந்த பெண் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது போன்ற விவரங்கள் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. இது தொடர்பாகப் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதையின் உச்சத்தில் ஒரு பெண்ணின் உயிரைப் பறித்த இந்தச் சம்பவம், சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



