பெங்களூரு அருகே பட்டப்பகலில் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
பெங்களூருவிலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ள மைலசந்திரா அருகே உள்ள ரேணுகா யெல்லம்மா லேஅவுட்டில் நேற்று மாலை 4 மணியளவில் அந்தப் பெண் மளிகைப் பொருட்கள் வாங்க வெளியே சென்றபோது, 5 பேர் கொண்ட ஒரு கும்பல் அவரைத் தடுத்தது. சில ஆண்கள் அவரைப் பின்தொடர்ந்து வந்து அவரைத் தொட்டுப் பேச முயற்சித்துள்ளனர். ஒரு கட்டத்தில், அவர் தப்பிக்க போராடியபோது, ஒரு ஆண் அவளை அறைந்ததாக கூறப்படுகிறது.
அந்த ஆண்களிடம் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள முயன்றபோது ஆண்கள் அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அப்பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் அவரது நண்பர் ஒருவரால் அவர் மீட்கப்பட்டார். இருப்பினும், அவளைத் துன்புறுத்திய ஆண்களில் ஒருவரை அடித்ததற்காக அந்த நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்த பெண் தனது வீட்டிற்கு சென்ற போதும் வீடு வரை சென்று அந்த கும்பல் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை காப்பாற்ற வந்த போது அவர்களையும் இந்த கும்பல் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த கும்பல் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து பேசிய போது “ நேற்று, நான் ஒரு கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, சாலையின் நடுவில் சண்டையிட்டுக் கொண்டிருந்த சில ஆண்களைப் பார்த்தேன். அவர்கள் என்னை தடுத்து நிறுத்தி, என்னைத் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தனர். தகாத முறையில் தொட்டனர். அவர்கள் குடிபோதையில் இருந்ததால், என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றனர், பின்னர் பொதுமக்கள் எனக்கு உதவ வந்தனர். ஆனால் எனக்கு உதவ வந்தவர்களை அவர்கள் அடித்தனர். அவர்கள் என்னையும் அடித்தார்கள்..” என்று அவர் கூறினார்.
இதையடுத்து பன்னேர்கட்டா காவல்துறையில் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
அந்தப் பெண் தனது நண்பரை தனக்கு உதவ அழைத்ததாக கூறப்படுகிறது. தன்னைத் துன்புறுத்தியவர்களில் ஒருவரை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இரு தரப்பிலிருந்தும் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து உடற்பயிற்சி பயிற்சியாளரான நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார், அதே நேரத்தில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை..