ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி ஓர் ஆண்டுக்கு மேல் ஆகும் நிலையில், அங்கு பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் நெயில் பாலிஷ் செய்தால் விரல்கள் வெட்டப்படும், புர்கா அணியாமல் வெளியே செல்லும் பெண்களின் தலை துண்டிக்கப்படும். வேறு ஆண்களுடன் பொது இடத்தில் பெண்கள் பேசக்கூடாது. அலுவலக பணிக்கு பெண்கள் செல்லக்கூடாது, போன்ற பல கட்டுப்பாடுகளாள் பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்,
கடந்த மார்ச் மாதம் 5-ம் வகுப்புக்கு மேல் மாணவிகள் கல்வி பயில தடை விதித்ததால் மகளிருக்கான நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. இதற்கு பல நாடுகளில் இருந்து கிளம்பிய எதிர்ப்பால் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்துள்ளனர். அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த உத்தரவு செல்லும். அடுத்த உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.