பெண்களின் உடல் ஒரு நுணுக்கமான உயிரியல் கடிகாரத்தை போன்றது. கருவுறுதல் மற்றும் தாய்மை என்பது அந்தந்த காலத்தின் வயது மற்றும் கருமுட்டைகளின் இருப்பைப் பொறுத்தே அமைகிறது. இன்றைய காலகட்டத்தில் கல்வி, வேலைவாய்ப்பு எனப் பல்வேறு காரணங்களால் திருமணமும் குழந்தைப்பேறும் தள்ளிப்போகும் சூழலில், ‘எந்த வயது வரை இயற்கையாகக் கருத்தரிக்க முடியும்?’, ’30 வயதிற்குப் பிறகு கருத்தரிப்பது பாதுகாப்பானதா?’ போன்ற கேள்விகள் பலரிடையே எழுகின்றன. இது குறித்துப் பெங்களூருவைச் சேர்ந்த மகளிர் நல மருத்துவ நிபுணர் திவ்யா வழங்கும் ஆலோசனைகளை இங்கே விரிவாகப் பார்ப்போம்.
மருத்துவர் திவ்யாவின் கூற்றுப்படி, பெண்கள் பிறக்கும்போதே ஒரு குறிப்பிட்ட அளவிலான கருமுட்டைகளுடன்தான் பிறக்கிறார்கள். வயது கூடக்கூட இந்தக் கருமுட்டைகளின் எண்ணிக்கையும் அதன் தரமும் இயல்பாகவே குறைய தொடங்குகின்றன. ஒரு பெண்ணின் 20-களின் தொடக்கத்தில் கருவுறுதல் திறன் உச்சத்தில் இருக்கும். 30 வயது வரை இது சீராக இருந்தாலும், 35 வயதைக் கடந்த பிறகு கருவுறும் வாய்ப்பு குறிப்பிடத்தக்க அளவில் சரிவைச் சந்திக்கிறது.
இருப்பினும், 35 அல்லது 40 வயதைக் கடந்த பெண்களுக்குத் தாய்மை என்பது எட்டாக்கனி அல்ல. “30-களின் பிற்பகுதியிலும், 40-களின் தொடக்கத்திலும் கூட இயற்கையாகக் கருத்தரிப்பது சாத்தியமே” என்கிறார் மருத்துவர் திவ்யா. ஆனால், ஒரு மாதவிடாய் சுழற்சியில் கருத்தரிப்பதற்கான வாய்ப்பு என்பது 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும். 45 வயதிற்குப் பிறகு இயற்கை முறையில் கருவுறுவது என்பது மிகவும் அரிதான ஒன்றாக மாறுகிறது. இதற்கு முக்கியக் காரணம், வயதான கருமுட்டைகளில் குரோமோசோம் பாதிப்புகள் (Chromosomal abnormalities) ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதே ஆகும். இது கருச்சிதைவு அல்லது குழந்தையின் மரபணு சார்ந்த பாதிப்புகளுக்குக் காரணமாக அமையலாம்.
தாய்மை என்பது வெறும் வயதை மட்டும் சார்ந்தது அல்ல; ஒரு பெண்ணின் ஒட்டுமொத்த ஆரோக்கியம், சீரான மாதவிடாய் சுழற்சி, உடல் எடை, மன அழுத்தம் மற்றும் வாழ்வியல் முறைகள் அனைத்தும் ஒருங்கே இணைந்துதான் கருவுறுதல் திறனைத் தீர்மானிக்கின்றன. எனவே, 30 வயதிற்குப் பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளத் திட்டமிடும் பெண்கள், மருத்துவ வழிகாட்டுதலோடு முன்னெச்சரிக்கையாகச் செயல்படுவது அவசியம். தொழில்முறை காரணங்களால் கர்ப்பத்தைத் தள்ளிப்போடும் பெண்கள், ஆரம்பத்திலேயே மருத்துவ ஆலோசனை பெற்றுத் தங்கள் கருமுட்டைகளை உறைய வைப்பது (Egg freezing) போன்ற நவீன மருத்துவத் தீர்வுகளையும் பரிசீலிக்கலாம்.
சரியான நேரத்தில் திட்டமிடுவதும், உடல் நலத்தில் அக்கறை கொள்வதும் தாய் மற்றும் குழந்தை இருவருக்குமான ஆரோக்கியத்தை உறுதி செய்யும். “உடல் சொல்லும் மாற்றங்களை கவனித்து, மருத்துவத் துணை கொண்டு திட்டமிட்டால், எந்த வயதிலும் ஆரோக்கியமான தாய்மை சாத்தியமே” என்பதே மருத்துவர் திவ்யா கூறியுள்ளார்.
Read More : தமிழக பத்திரப் பதிவுத்துறையில் அதிரடி மாற்றம்..!! நடைமுறைக்கு வந்த கடுமையான விதிமுறைகள்..!! என்ன தெரியுமா..?



